பெய்ஜிங்: சீனாவில் 10 மாதங்களுக்குப் பிறகு ஒரே நாளில் ஆக அதிகமான கொவிட்-19 நோய்த்தொற்றுச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் 138 பேருக்குத் தொற்று உறுதியானதாக அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்தது. அதற்கு முந்தைய நாள் பதிவாகி இருந்த 115 சம்பவங்களைவிட இந்த எண்ணிக்கை அதிகம்.
புதிய தொற்றுச் சம்பவங்களில் 124 பேருக்கு உள்ளூரில் தொற்று உறுதியானதாக ஆணையம் கூறியது. அவர்களில் 81 பேருக்கு தலைநகர் பெய்ஜிங் அருகே உள்ள ஹெபெய் மாநிலத்திலும் 43 பேருக்கு வடகிழக்கு ஹெய்லோங்ஜியாங் மாநிலத்திலும் தொற்று உறுதியானது.
நோய்த்தொற்றுக்கு ஒருவர் உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு உயிரிழப்பு பதிவாகி இருப்பது இதுவே முதன்முறை. சீனாவில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் பெருந்தொற்று நிலவரத்துடன் ஒப்புநோக்க, அண்மைய நாட்களில் கொவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை குறைவு என்றாலும், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக இம்மாதம் 28 மில்லியனுக்கும் அதிகமானோரை வீட்டில் தனிமைப்படுத்தும் உத்தரவை சீனா பிறப்பித்துள்ளது.
அடுத்த மாத நடுப்பகுதியில் சீனப் புத்தாண்டு கொண்டாடப்பட இருக்கும் சமயத்தில் புதிய நோய்த்தொற்று அலை எழுந்துள்ளது.
சீனப் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு மில்லியன் கணக்கானோர் அவரவர் சொந்த ஊர்களுக்குத் திரும்புவது வழக்கம்.
எனினும், விடுமுறை காலத்தில் தேவையில்லாத பயணங்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறு ஹெய்லோங்ஜியாங் மாநில சுகாதாரத் துறை 37.5 மில்லியன் பேரைக் கேட்டுக்கொண்டுள்ளது.

