மலேசியாவில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 4,029 பேருக்கு மேல் கொவிட்-19 தொற்று உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. அங்கு ஒரே நாளில் 4,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டது இதுவே முதல் முறை. இம்மாதம் 14ஆம் தேதி 3,337 சம்பவங்கள் பதிவானதே முந்தைய உச்சமாக இருந்தது.
நேற்று உறுதிசெய்யப்பட்ட 4,029 தொற்றுச் சம்பவங்களில் எட்டுப் பேர் மட்டுமே வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். இதையடுத்து, மொத்த பாதிப்பு 155,095 ஆனது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரில் மேலும் 2,148 பேர் குணமடைந்து, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிட்டனர். இதையடுத்து, தொற்றிலிருந்து மீண்டோர் எண்ணிக்கை 117,375 ஆக அதிகரித்தது.
"இப்போதைக்கு 205 நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்; 79 பேருக்குச் செயற்கைச் சுவாச உதவி தேவைப்படுகிறது," என்று மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் எட்டுப் பேர் மரணம் அடைந்ததை அடுத்து, மலேசியாவில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 594ஆக உயர்ந்தது.

