மலேசியாவில் பதிவாகும் கிருமித்தொற்று எண்ணிக்கை அண்மை நாட்களாக மூவாயிரம், நாலாயிரம் என்று ஏறிக்கொண்டே செல்வதால் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அரசாங்கம் பெருமுயற்சிகளை எடுத்து வருகிறது.
கிருமித்தொற்று உறுதி செய்யப்படுவோருக்குச் சிகிச்சை அளிக்க பொது மருத்துவமனைகளில் படுக்கைகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இந்த இக்கட்டான நிலையில் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற தனியார் மருத்துவமனைகள் முன்வந்து உள்ளன. கொவிட்-19 நோயாளிகளைக் கையாள்வதற்கான ஏற்பாடுகளில் அவை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மருத்துவமனைகளின் பொது வார்டுகளிலும் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கையை மலேசிய தனியார் மருத்துவமனைச் சங்கம் கணக்கெடுத்து வருவதாக தகவல் ஒன்று தெரிவித்தது.
பொது வார்டும் தீவிர சிகிச்சைப் பிரிவும் கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படலாம். தனியார் மருத்துவமனைகள் அனைத்திலும் உள்ள மொத்த படுக்கைகளில் குறைந்தபட்சம் பத்து விழுக்காடாவது கொவிட்-19 நோயாளிகளுக்கு ஒதுக்கி வைப்பதற்கான ஏற்பாடுகளில் சங்கம் ஈடுபட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி நாடு முழுவதும் கண்டறியப்படும் கொவிட்-19 நோயாளிகள் அரசாங்க மருத்துவமனைகளிலேயே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
நோயாளிகளின் எண்ணிக்கை பெருகிவருவதால் அந்த மருத்துவமனைகளில் போதுமான படுக்கைகள் இல்லை. கோலாலம்பூர் மருத்துவமனையிலும் மலேசிய பல்கலைக்கழக மருத்துவ நிலையத்திலும் கொவிட்-19 நோயாளிகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் படுக்கைகள் 100 விழுக்காடு நிரம்பிவிட்டதாக அண்மையில் மலேசிய மாமன்னரின் அரண்மனை அறிக்கை தெரிவித்தது.
பேராக், சிலாங்கூர், மலாக்கா, திரெங்கானு, சரவாக் போன்ற மாநிலங்களின் மருத்துவமனைகளில் 70 விழுக்காட்டுக்கும் மேலான தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் நிரம்பிவிட்டதாகவும் அப்போது குறிப்பிடப்பட்டது.
இப்படிப்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனைகளின் பங்கு அத்தியாவசியமாகிறது. உதவிக்கு முன்வர மலேசிய தனியார் மருத்துவமனை சங்கம் கொள்கை அளவில் ஒப்புக்கொண்டுள்ளதாக சுகாதார துணை அமைச்சர் நூர் அஸ்மி அண்மையில் தெரிவித்திருந்தார். தொற்று நோயாளிகளுக்கான சிகிச்சை அரசாங்க மருத்துவமனைகளில் செய்யப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு கூறியிருந்தாலும் சிகிச்சை வழங்க முன்வரும் எந்தவொரு தனியார் சுகாதார மையத்தையும் அது நிறுத்தவில்லை என்று அவர் கூறியிருந்தார். இது தொடர்பாக மலேசிய தனியார் மருத்துவமனை சங்கத்தின் தலைவர் டாக்டர் குல்ஜித் சிங் விளக்கம் அளித்துள்ளார். கொவிட்-19 நோயாளி
களுக்கு தனியார் மருத்துவமனைகள் ஏற்கெனவே சிகிச்சை அளித்து வந்தாலும் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் தயாரானதும் அவற்றுக்கு அனுப்பப்பட்டு வந்தனர் என்றார் அவர்.அதனைத் தொடர்ந்து தற்போது தனியார் மருத்துவமனை ஒவ்வொன்றும் எத்தனை நோயாளிகளை ஏற்கலாம் என்பது பற்றியும் நோய்த்தன்மை 5 வரையிலானவற்றில் எதுவரை அம்மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்கலாம் என்பது பற்றியும் அரசாங்கத்துடன் கலந்துபேசி முடிவெடுக்க சங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.