இந்தோனீசியாவின் பாலித் தீவில் உள்ள ரிசோர்ட்களில் முகக்கவசம் அணியாத வெளிநாட்டவர்களுக்கு வித்தியாசமான தண்டனை வழங்கப்படுகிறது.
‘புஷ்-அப்’ எனப்படும் உடற்பயிற்சியே அந்த தண்டனை.
டி-சட்டை, குட்டையான காற்சட்டைகள் அணிந்த சுற்றுப் பயணிகள் வெயிலில் ‘புஷ்-அப்’ செய்வதையும் முகக்கவசம் அணிந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களைக் கண்காணிப்பதையும் காட்டும் காணொளி சமூக ஊடகத்தில் பரவியது.
பொது இடங்களில் முகக்கவசம் அணிவது பாலியில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு முகக்கவசம் அணியாமல் சுற்றிக்கொண்டிருந்த சுமார் 70 பேர் 100,000 ரூபியா ($9.45) அபராதம் கட்டினர். ஆனால், வேறு 30 பேர் தங்களிடம் பணம் இல்லை என்று கூறியதால் அவர்கள் ‘புஷ் - அப்’ உடற்பயிற்சி செய்ய பணிக்கப்பட்டது.
முகக்கவசம் இல்லாதவர்கள் 50 ‘புஷ் - அப்’களும் முகக்கவசத்தை சரியாக அணியாதவர்கள் 15 ‘புஷ் - அப்’களும் செய்ய வேண்டியிருந்தது.
கொரோனா கிருமித்தொற்று தொடர்பான விதிமுறைகளை மீறுவோர் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படுவர் என பாலி ஏற்கெனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.