தாம் ஏற்படுத்தி இருக்கும் அரசியல் இயக்கம் தற்போதுதான் தொடங்கி இருப்பதாக அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து விலகிச் சென்ற டோனல்ட் டிரம்ப் தெரிவித்தார்.
அதிபராக திரு டிரம்ப் ஆற்றிய இறுதி உரை நேற்று வெளியிடப்பட்டது. புதிய நிர்வாகம் வெற்றிகரமாகச் செயல்பட அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என, ஜோ பைடனின் பெயரைக் குறிப்பிடாமல் அவர் தெரிவித்தார்.
அதிபர் பொறுப்புக்குரிய மரபை தாம் காப்பாற்றியதாகவும் அப்போது அவர் சொன்னார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அதிபர் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்த டிரம்ப், புதிய அதிபர் ஜோ பைடனைச் சந்திக்கவில்லை.
அமெரிக்காவின் 46வது அதிபராக திரு ஜோ பைடன் இந்நேரம் பதவி ஏற்றிருப்பார். அரசியல் கொந்தளிப்பு, கொரோனா கிருமிப் பரவல் போன்ற சூழலில் இந்தப் பதவி ஏற்பு முக்கியத்துவம் வாய்ந்தது. அமெரிக்க நேரப்படி புதன்
கிழமை நண்பகலுக்கு சற்று முன்னதாக பைடன் பதவி ஏற்புக்கு நேரம் குறிக்கப்பட்டு இருந்தது.
இரு வாரங்களுக்கு முன்னால் திரு டிரம்ப்பின் ஆதரவாளர்கள் புகுந்து தாக்குதல் நடத்திய அதே கேப்பிட்டல் கட்டடத்தில் திரு பைடனின் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தலைமை நீதிபதி ஜான் ராபர்ட் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.
பதவி ஏற்பு நிகழும் வேளையில் நேற்று வரை அதிபராக இருந்த டோனல்ட் டிரம்ப், கிட்டத்தட்ட 1,000 மைல்களுக்கு அப்பால் சென்றிருப்பார். தென் ஃபுளோரிடாவில் உள்ள மார்-எ-லாகோ உல்லாசத்தலத்தில் தங்கும் வகையில் அவருக்கான நிகழ்ச்சிகள் வகுக்கப்பட்டு இருந்தது. இனி வரும் நாள்களில் அவர் என்ன செய்யப்போகிறார் என்பது பற்றி உறுதியான தகவல் எதுவும் இல்லை. இருப்பினும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள அரசியல் குற்றச்சாட்டுகளின் மீதான விசாரணை முடிவைப் பொறுத்து அவரது அரசியல் எதிர்காலம் அமையும் என்று கூறப்படுகிறது. இவ்விவகாரத்தில் டிரம்ப்பை செனட் தண்டித்தால் 2024 அதிபர் தேர்தலில் அவரால் போட்டியிட முடியாது.
இதற்கிடையே, பதவியை விட்டு இறங்குமுன், பொதுமன்னிப்பு மற்றும் தண்டனைக் குறைப்புக்கான உத்தரவில் திரு டிரம்ப் கையெழுத்திட்டார். 70 பேருக்கு பொது மன்னிப்பும் 73 பேரின் சிறைத் தண்டனை குறைப்பும் அந்த உத்தரவு மூலம் வழங்கப்படும்.
பொதுமன்னிப்பு பெற்றவர்களில் முக்கியமானவர் ஸ்டீவ் பென்னன், 67. இதற்கு முன்னர் 2016ல் அதிபர் தேர்தல் நடைபெற்றபோது திரு டிரம்ப்பின் முக்கிய ஆலோசகராகச் செயல்பட்டவர் இவர். அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்ப நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்ட டிரம்ப்பின் ஆதரவாளர்களிடம் மோசடி செய்ததாக கடந்த ஆண்டு இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.