மலேசியாவின் சிலாங்கூர் மாநில அரசாங்கம், தற்போது எதிர்நோக்கும் கொவிட்-19 நெருக்கடிச் சூழலைச் சமாளிப்பதற்கு 73.877 மில்லியன் ரிங்கிட் ஊக்கத்தொகுப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது.
சிலாங்கூர் மாநில மக்களின் நலனைப் பேணிக்காக்க, நம்மிடம் உள்ள அனைத்து வளங்களும் பயன்படுத்தப்படும் என்று இந்தத் திட்டத்தை அறிவித்த அம்மாநில முதல்வர் அமிருதின் ஷாரி கூறினார். இந்த ஊக்கத்தொகுப்புத் திட்டத்தின் தொகையில் இருந்து 7.177 மில்லியன் ரிங்கிட் தொகை 'நம் சிலாங்கூர் ஊக்கதொகைத் தொகுப்புத் திட்டம்' மூலம் 762 மாணவர்களுக்குக் கடன் அளிப்பதற்காக சிலாங்கூர் அறக்கட்டளைக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 சோதனைத் திட்டத்திற்காக 6 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 50,000 பேர் பயனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எளிதில் நோய்த்தொற்று பீடிக்கும் ஆபத்து உள்ள முதியோர்களுக்கும் முதியோர் இல்லங்களில் வசிப்போருக்கும் இத்திட்டத்தின் மூலம் உதவியளிக்கப்படும். அத்துடன் சமூகத்தில் கிருமி பரவாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில் சமூகத்தில் கொரோனா சோதனை முடுக்கிவிடப்படும்.
இதுவரையிலும் சமூகத்தில் 19,976 பேருக்கு இலவசமாக கொவிட்-19 சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திரு அமிருதின் தெரிவித்தார். இந்தத் திட்டத்தின் வாயிலாக 9,822 மருத்துவத்துறை முன்களப் பணியாளர்கள் மற்றும் நடப்பில் உள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டைக் கண்காணிக்கும் பணியில் இருக்கும் காவல்துறையினர், இராணுவத்தினர் ஆகியோருக்கு உணவு வழங்குவதற்காக 3 மி ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூரில் கொவிட்-19 புதிய தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் குறைந்த பாதிப்புள்ள நோயாளிகளை மருத்துவமனையில் தங்க வைப்பதாலும் அங்கு அவர்களைத் தனிமைப்படுத்துவதாலும் உதவி தேவைப்படும் நோயாளிகள் காத்துக்கிடக்க நேரிடுகிறது என்று அவர் கவலை தெரிவித்தார்.
இந்த நெருக்கடி காலத்தில் இயன்றவரை மக்களின் சுமையைக் குறைப்பதற்காக 100,000 வெள்ளி சிறப்புத் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை 56 தொகுதிகளுக்குப் பிரித்து அளிக்கப்படும். இதன்மூலம் அந்தந்தத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் அடிப்படைத் தேவையான அரிசி, சமையல் எண்ணெய், மாவு, டின்னில் அடைக்கப்பட்ட உணவு மற்றும் இதர தேவைகளைப் பூர்த்தி செய்யலாம் என்று அவர் கூறினார்.
மேலும் மக்களுக்கு உதவுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் 50,000 ரிங்கிட் வழங்கப்படும் என்றும் திரு அமிருதின் தெரிவித்தார்.

