அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுள்ள ஜோ பைடனின் முதல் இலக்கு கொவிட்-19. நாட்டைச் சூறையாடும் கொரோனாவைத் துடைத்தொழிக்க ஒட்டுமொத்த தேசிய உத்தியை அறிவித்த அவர், நேற்று அதற்கான 10 புதிய நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.
இரண்டு மில்லியன் பேருக்கு மேல் கிருமித்தொற்று கண்டுள்ள அந்த நாட்டில் இதுவரை கிருமித்தொற்றால் இறந்தோர் எண்ணிக்கை 420,285. அடுத்த மாதம் மொத்த உயிரிழப்பு 500,000 ஆகிவிடும் என கணிக்கப்படுகிறது.
“மேம்படுவதற்கு முன்னர் நிலைமை இன்னும் மோசமடையும்.இந்தக் குழப்பமான சூழலிலிருந்து உடனடியாக வெளிவராவிட்டால் நிலைமையைச் சரிப்படுத்த பல மாதங்கள் ஆகும்,” என்று பைடன் எச்சரித்தார். அதேநேரத்தில் இந்தச் சூழலிலிருந்து அமெரிக்கா மீண்டுவிடும் என்று நம்பிக்கையையும் அவர் அளித்தார்.
“கொள்ளை நோயை அமெரிக்கா வெற்றிகொள்ளும். உதவி விரைவில் நடைமுறைப்படுத்தப் படும்,” என அவர் உறுதிகூறினார்.
பைடனின் கொரோனா ஒழிப்புத் திட்டத்தில், தடுப்பூசி இயக்கத்தை முழுமூச்சில் தீவிரப்படுத்துவது, மாநிலங்களுக்கிடையே பயணம் செய்வோருக்கு முககவசம் கட்டாயமாக்கப்படுவது, அனைத்துலகப் பயணிகள் தனிமைப்படுத்தப்படுவது, பள்ளிகள் பாதுகாப்புடன் மீண்டும் திறக்க தேவையான வசதிகளை வழங்குவது, சோதனையை அதிகரித்தல் ஆகியவை அடங்கும்.
தற்காப்பு உற்பத்தி சட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம், தனி மனிதர் பாதுகாப்பு சாதனங்கள், சோதனைக்கும் தடுப்பூசிகளுக்கும் தேவையான பொருட்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான “முழு அளவிலான, போர்க்கால திட்டத்தையும்” அவர் அறிவித்தார். தேவையான சாதனங்களை உற்பத்தி செய்வதற்கு முன்னுரிமை அளிக்க நிறுவனங்களை அணிதிரட்டுவதற்கு இச்சட்டம் அனுமதிக்கிறது.
“400,000 அமெரிக்கர்கள் இறந்துவிட்டார்கள். இது இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட உயிரிழப்பைவிட அதிகம்,” என்று பைடன் கவலை தெரிவித்தார்.
பைடனின் தேசிய உத்தியின் முக்கிய அங்கமாக தடுப்பூசி இயக்கம் உள்ளது. பதவியேற்ற முதல் 100 நாட்களில் 100 மில்லியன் தடுப்பூசிகளைப் போடும் இலக்கை அவர் கொண்டுள்ளார். அதற்குமுன் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த முகக்கவசம் கட்டாயம் என்ற பைடன், முகக்கவசம் அணிந்திருந்தால் சென்ற ஏப்ரலில் இருந்து இப்போது வரை 50,000 உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம் என்றார்.
விமான நிலையங்கள், ரயில்கள், விமானங்கள், பேருந்துகளில் முகக்கவசம் அணிவது கட்டாயாமாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டினர் கொவிட்-19 சோதனை செய்திருப்பதும், தரையிறங்கியதும் தனிமைப்படுத்தப்படுவதும் கட்டாயமாகிறது.
தமது தேசிய உத்தி அறிவியல் அடிப்படையிலானது, அரசியல் அடிப்படையில் அல்ல என்ற பைடன், அதனை விவரிக்கும் 198 பக்க திட்டத்தை வெளியிட்டார்.
நிர்வாக உத்தரவுகளைப் பிறப்பிக்க அதிபர் நாடாளுமன்ற ஒப்புதல் பெறவேண்டியதில்லை. கொள்ளைநோய் ஒழிப்பு தவிர்த்து, பாரிஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்காவை சேர்ப்பது, சில முஸ்லிம் நாடுகள் மீது டிரம்ப் விதித்த பயணத் தடைகளை ரத்து செய்வது, போன்றவற்றுடன், இனப்பாகுபாடு, பாலின சமத்துவம் தொடர்பான வேறு சில உத்தரவுகளையும் அவர் பிறப்பித்தார்.