2002ஆம் ஆண்டின் பாலி வெடிகுண்டு தாக்குதல், 2003ஆம் ஆண்டின் ஜகார்த்தா தாக்குதல் ஆகிய சம்பவங்களின் தொடர்பில் மூவர் மீது சட்ட வழக்கப்படியான குற்றச்சாட்டுகளை அமெரிக்க ராணுவம் சுமத்தி உள்ளது.
அவர்களில் ஒருவர் இந்தோனீசியர், மற்ற இருவர் மலேசியர்கள். தாய்லாந்தில் மூவரும் பிடிபட்டு சுமார் 18 ஆண்டுகள் ஆன நிலையிலும் 14 ஆண்டுகளுக்கு மேல் அமெரிக்க ராணுவ சிறையில் கைதிகளாக இருக்கும் நிலையிலும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. ரிதுவான் இசாமுதீன் என்னும் இந்தோனீசிய தீவிரவாதியும் முகம்மது நஸிர் லெப், முகம்மது ஃபாரிக் அமின் ஆகிய மலேசியர்களும் ஜெமா இஸ்லாமிய தீவிரவாதக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.
2002 அக்டோபர் 12ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட பாலி வெடிகுண்டுத் தாக்குதலில் 202 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி ஜகார்த்தாவில் உள்ள ஜே டபிள்யூ மரியட் ஹோட்டலில் நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் மாண்டதோடு ஏராளமானோர் காயமுற்றனர்.
கொலை, கொலை முயற்சி, சதித்திட்டம் தீட்டுதல், வேண்டுமென்றே கொடுங்காயம் ஏற்படுத்துதல், பயங்காரவாதம், பொதுமக்கள் மீதான தாக்குல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் மூவர் மீதும் சுமத்தப்பட்டு உள்ளதாக அமெரிக்க ராணுவத் தலைமை அலுவலகமான பென்டகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.