முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கு எதிரான பதவி நீக்கும் தீர்மானம் மீதான விசாரணை பிப்ரவரி 8ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப்பின் ஆதரவாளர்கள் அந்நாட்டு நாடாளுமன்ற வளாகத்தில் வன்முறையில் ஈடுபட்ட சம்பவத்தில் ஐவர் உயிரிழந்தனர்.
இதற்கு டிரம்ப்பின் உந்துதலான பேச்சுகளே காரணம் என்று கூறப்பட்டது.
இதையடுத்து ஜனநாயகக் கட்சியினர், குடியுரசுக் கட்சியின் சில உறுப்பினர்கள் ஆதரவுடன் பிரதிநிதிகள் சபையில் அவரை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றினர்.
இது செனட் சபை ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து அந்தத் தீர்மானத்தின் மீதான விசாரணை தொடங்குகிறது.
இதற்கிடையே, தெற்கு கரோலினாவைச் சேர்ந்த பட்ச் பவர்ஸ் எனும் வழக்கறிஞரை, இந்த வழக்கில் தம்மைப் பிரதிநிதிக்க திரு டிரம்ப் அமர்த்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. இருந்தாலும், இது குறித்த கேள்விக்கு திரு பவர்ஸ் பதிலேதும் தெரிவிக்கவில்லை என்றும் ஊடகங்கள் தெரிவித்தன.