அண்மைய மாதங்களாக பிரிட்டனில் பரவி வரும் உருமாறிய கொவிட்-19 கிருமி அதிக உயிர் இழப்பை ஏற்படுத்தக்கூடியது, விரைந்து பரவக்கூடியது என்பதை ஆய்வு முடிவுகள் காட்டுவதாக அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். அதுவே பிரிட்டனில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்திருப்பதற்குக் காரணம் என்று அவர் குறிப்பிட்டார். அங்கு நேற்று முன்தினம் மட்டும் 1,401 பேர் கொரோனா தொற்றால் மாண்டுபோயினர். இதையடுத்து, ஐரோப்பாவிலேயே ஆக அதிகமாக, பிரிட்டனில் இதுவரை கிருமித்தொற்றால் 95,981 பேர் இறந்துவிட்டனர்.
உருமாறிய கொரோனா தொற்றால் சில வயதுப் பிரிவினரிடத்தில் 30-40% அதிக உயிரிழப்புகள் ஏற்படலாம் என்று அரசாங்கத்தின் தலைமை அறிவியலாளர் பேட்ரிக் வேலன்சும் கூறியுள்ளார்.சராசரியாக, பிரிட்டனில் 55 பேரில் ஒருவரையும் லண்டனில் 35 பேரில் ஒருவரையும் கொரோனா தொற்றிவிட்டது. இதுவரை 5.4 மில்லியனுக்கும் மேற்பட்டோருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகக் கூறிய திரு ஜான்சன், உருமாறிய கிருமிக்கு எதிராகவும் அது செயல்திறன்மிக்கதாக உள்ளது என்றும் சொன்னார்.
பிப்ரவரி மாத நடுப்பகுதிக்குள் 15 மில்லியன் பேருக்கும் செப்டம்பர் மாதத்திற்குள் பெரியவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட பிரிட்டன் இலக்கு கொண்டு உள்ளது. இதனிடையே, சீனா உட்பட 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு உருமாறிய கொரோனா கிருமி பரவிவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் கூறியிருக்கிறது.