கொரோனா கிருமிப் பரவலின் வேகத்தைத் தடுக்க முடியாதிருப்பதால், நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின்போது (எம்சிஓ) செயல்பட அனுமதிக்கப்பட்ட முக்கிய பொருளியல் துறைகளை மூட மலேசியா ஆயத்தமாகி வருவதாகக் கூறப்படுவதை ஐரோப்பிய ஒன்றிய-மலேசியா வர்த்தக, தொழில் சபை நேற்று மறுத்தது. அனைத்துலக வர்த்தக, தொழில் அமைச்சுடன் நடத்தப்பட்ட அதிகாரபூர்வமற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, அது தனது உறுப்பினர்களுக்கு அனுப்பிய அறிக்கை வெளியே கசிந்துள்ளதாக அது குறிப்பிட்டது.
அதிகரித்து வரும் கிருமித் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் வர்த்தகங்களிடம் விழிப்புணர்வை அதிகரிப்பது குறித்தும் வர்த்தகங்கள் முன்வந்து பங்காற்றாவிட்டால் அது எவ்வாறு வர்த்தகங்களைப் பாதிக்கும் என்பது குறித்துமே பேசப்பட்டதாகவும் அது சொன்னது.
அன்றாடத் தொற்று எண்ணிக்கை குறையாவிட்டால் பிப்ரவரி 4ஆம் தேதி எம்சிஓ விதிமுறை காலாவதியானதும், அத்தியாவசிய தேவைகள் தவிர்த்த அனைத்து வர்த்தக செயல்பாடுகளையும் நிறுத்தும் முழு முடக்கநிலையை அறிவிக்க அந்நாடு திட்டமிடுவதை பல துறைகளும் அரசாங்கத் தகவல்களும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் முன்னதாகக் கூறின.
நேற்று முன்தினம் அங்கு 4,275 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 667 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிற அமைச்சுகள் கட்டுப்படுத்தப்பட்ட வர்த்தக நடவடிக்கைகள் அத்தியாவசிய சேவைகளுடன் தொடர்ந்து செயல்படலாம் என்றே கருதுகின்றன.
அனைத்துலக வர்த்தக, தொழில் அமைச்சு வெள்ளி அன்று நடத்திய கலந்துரையாடலின்போது, உற்பத்தித் துறையை எச்சரித்துள்ளது. மலேசியாவின் 300 கிருமித்தொற்று குழுமங்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு இந்தத் தொழிலுடன் தொடர்புடையதாக உள்ளது.
மலேசிய உற்பத்தியாளர்கள் சம் மேளனமும் ஐரோப்பிய ஒன்றிய- மலேசியா வர்த்தக, தொழில் சபையும் தங்கள் உறுப்பினர்களுக்கு அனுப்பிய அறிக்கைகளில், கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளைப் பரிந்துரைத்துள்ளது.
ஊழியர் தங்குமிடங்களில் தனிமைப்படுத்தும் இடங்களை அமைத்ததல், போக்குவரத்து வாகனங்களில் ஊழியர் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைத்தல், ஊழியர்களின் தங்குமிடப் பொறுப்புகள் வெளிநிறுவனங்களிடம் கொடுக்கப்பட்டிருந்தாலும், அவர்களின் நடவடிக்கைகளின் முழுப் பொறுப்பையும் ஏற்பது உள்ளிட்டவை இதில் அடங்கும்.
தொடர்புடைய செய்திகள்
கொவிட்-19 குழுமங்களின் தொடக்கமாக பணியிடங்கள் மாறி வருவதை சுகாதார அமைச்சு வெளியிடும் அன்றாட நிலவரம் காட்டுகின்றன. கடந்த வியாழன் முதல் கண்டறியப்பட்ட 39 புதிய குழுமங்களில் மூன்றில் இரண்டு பங்கு பணியிடங்களிலிருந்து வந்தவை.
கடந்த ஆண்டு மலேசியாவும் தொற்றுநோய் பரவலால் பொருளியல் மந்தத்தைச் சந்தித்தது. இவ்வாண்டு பொருளியல் மீட்சிக்கான நம்பிக்கையை நடமாட்டக் கட்டுப்பாடு குறைக்கலாம் என்பதை நிதியமைச்சர் ஜஃப்ருல் அஜீஸ் ஒப்புக்கொண்டார். எனினும் 2021க்கான 6.5-7.5% வளர்ச்சி முன்னுரைப்பை அரசாங்கம் மாற்றவில்லை என்று அவர் கூறினார்.


