ஜோகூர் பாருவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பொம்மைகளை விற்று நிதி திரட்டும் பத்து வயது சிறுமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ஸ்கூடாயில் உள்ள சிறுமி தமிழ் இலக்கியாவின் வீட்டுக்கு நேற்று வந்த ஜோகூர் சுகாதார, சுற்றுச்சூழல் குழுவின் தலைவர் ஆர். வைத்தியநந்தன், மாநில சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் அமான் ராபு, ஜோகூர் மருத்துவ சங்கத்தின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் இங் கிம் ஃபோங் ஆகியோர் சிறுமியைப் பாராட்டி னர்.
அப்போது பேசிய வைத்தியநந்தன், இந்தச்சிறிய வயதில் மற்றவர்களின் சிரமங்களைப் புரிந்துகொண்டு தன்னாலான உதவிகளை அவர் செய்து வருவது பாராட்டுக்குரியது என்றார்.
தமிழ் இலக்கியா பொம்மைகளை செய்து ஒவ்வொன்றையும் ஐந்து ரிங்கிட்டுக்கு விற்று 115.90 ரிங்கிட் வரை திரட்டியுள்ளார்.
இந்த நிதி பெட்ரோல் நிலையத்தில் உள்ள நன்கொடை பெட்டியில் கொவிட்-19 நோயாளிகளுக்காக வைக்கப்படுகிறது.

