தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது இலங்கை ராணுவத் தளபதிகள் சிலர் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாகவும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஐநாவின் மனித உரிமைப் பிரிவின் தலைவர் மிஷேல் பேச்சலெட் அழைப்பு விடுத்துள்ளதாக ஏஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
2009ஆம் ஆண்டில் போரின் கடைசிக் கட்டத்தில் இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதல் காரணமாக மாண்ட ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு நியாயம் இன்னும் வழங்கப்படவில்லை என்றார் அவர்.
இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் மாண்டதாக கூறப்படுகிறது.
சரணடைந்த போராளிகளைக் கொன்றது, மருத்துவமனைகளைத் தகர்த்தியது, கண்மூடித்தனமான வான்வழித் தாக்குதல்களில் ஈடுபட்டது போன்ற போர்க்குற்றங்களை இலங்கை ராணுவம் புரிந்ததாக ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.