கோலாலம்பூரிலுள்ள ஒரு கோயிலின் உற்சவமூர்த்தியை தூக்கி அதன் தேரில் ஏற்றிச் செல்ல உதவிய மலேசிய போலிசார், இது குறித்து விளக்கம் அளித்துள்ளனர். கிட்டத்தட்ட 10 அதிகாரிகள் இந்து பக்தர்களுக்கு இந்த உதவியைச் செய்வதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வலம் வருகிறது. ஜாலான் துன் எச்எஸ் லீயிலுள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலில் இந்தக் காணொளி நேற்று அதிகாலை 3 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டதாக அந்நாட்டுப் போலிசார் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் அதிகாரிகள் ஏன் பங்கேற்றனர் என இணையவாசிகள் சிலர் வினவினர். ஆயினும், வேறு சிலரோ இவர்களது உதவிக்காக நன்றி தெரிவித்தனர்.
மலேசியாவின் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் விதிமுறைகளை இந்த ஆலயம் பின்பற்றியதால் அங்கு பத்து பக்தர்கள் மட்டுமே இருந்தனர். அதனால் அவர்களுக்கு அதிகாரிகள் உதவி செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் இந்துக்கள் என்றும் கூறப்படுகிறது.

