தடுப்பூசி போட்டுக்கொண்ட சிங்கப்பூரர்கள் மலேசியாவிற்குள் தனிமைப்படுத்தப்படாமல் நுழைய அனுமதிக்கும் ஏற்பாடுகளை மலேசிய அரசாங்கம் செய்யும் என்று நம்பிக்கை கொள்வதாக மலேசியாவின் பயணத்துறை, வர்த்தகக் குழுக்கள் கூறியுள்ளன.
சிங்கப்பூருடன் அதற்கான பேச்சுவார்த்தையை அந்நாட்டு அரசாங்கம் தொடங்கும் என்று அவர்கள் எண்ணுகின்றனர்.
உள்ளூர் பொருளியல் மீட்சியடைய அரசாங்கம் இந்தப் பேச்சுவார்த்தையைத் தொடங்குவது அத்தியாவசியமானது என்று மலேசிய சுற்றுப்பயண வழிகாட்டி மன்றத் தலைவர் ஜிம்மி லியோங் தெரிவித்தார்.
"மாநில அரசு மத்திய அரசுக்கு நெருக்கடி அளித்து சிங்கப்பூருடன் பேச்சுவார்த்தையைத் தொடங்க வைக்கவேண்டும்.
"இரு நாடுகளும் ஒன்றையொன்று சார்ந்து இருப்பதால் இரு நாடுகளுக்கும் இந்த ஏற்பாடு முக்கியமான ஒன்று. நோய்ப் பரவல் சூழலுக்குப் பின் பொருளியல் வேகமாக மீண்டுவர முன்கூட்டியே பேச்சுவார்த்தையைத் தொடங்குவது உதவும்," என்றார் அவர்.
தடுப்பூசிப் போடப்பட்டவர்களின் இருநாட்டுப் பயணத்தைக் கண்காணிக்கும் முறைகளையும் இரு அரசாங்கங்கள் கலந்தாலோசிக்கவேண்டும், என்றார் அவர்.
"முடிவுகள் உடனடியாக எடுக்கப்படவில்லை என்றாலும் முன்னோட்டமாகச் சில பேச்சுவார்த்தைகள் நடப்பது முக்கியம்," என்றார் அவர்.
"ஜோகூரில் குடும்ப உறுப்பினர்களைக் கொண்டவர்கள், உடனடி அலுவல்களுக்காக அங்கு செல்லவேண்டியவர்கள், இங்குள்ள மலேசியர்கள் முதலியானோரை கவனத்தில் கொள்ளவேண்டும்," என்று திரு லியோங் குறிப்பிட்டார்.

