சுமார் 10 ஆண்டுகளாக தாயின் சடலத்தை குளிர்பதனப் பெட்டிக்குள் வைத்து, அதே வீட்டில் வசித்து வந்த பெண்ணை போலிசார் கைது செய்துள்ளனர்.
ஜப்பானைச் சேர்ந்த 48 வயது யூமி ஹோஷினோ எனும் அந்த மாது, தம் தாயார் உயிரிழந்த பிறகு அவர்கள் வசித்து வந்த வீட்டை விட்டு வெளியேற விரும்பாததால் அவ்வாறு செய்ததாகக் கூறப்பட்டது.
தம் தாயாரின் உடலை 10 ஆண்டுகளுக்கு முன்பு குளிர்பதனப் பெட்டியின் உறைபனி பகுதியில் மறைத்து வைத்ததாக யூமி தெரிவித்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
யூமியின் தாயார் இறந்தபோது அவருக்கு 60 வயது இருந்திருக்கலாம் என்றாலும் அவர் இறந்த நேரத்தையோ, அவரது மரணத்துக்கான காரணத்தையோ உடற்கூறு ஆய்வில் கண்டுபிடிக்க முடியவில்லை என அறிக்கைகள் குறிப்பிட்டன.
வீட்டு வாடகை செலுத்தாததால் யூமி அந்த வீட்டிலிருந்து இம்மாத மத்தியில் கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாகவும் கடந்த புதன்கிழமை அந்த வீட்டைச் சுத்தம் செய்த நபர் மறைத்து வைக்கப்பட்டிருந்த தாயின் சடலத்தைக் கண்டுபிடித்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தாங்கள் வசித்து வந்த அரசாங்க வீட்டின் குத்தகை ஒப்பந்தம் தாயாரின் பெயரில் இருந்ததாகவும் தாயார் இறந்து போன விவரம் வெளியில் தெரிந்தால் அந்த வீட்டிலிருந்து தாம் வெளியேற்றப்படக்கூடும் என்ற அச்சத்தாலும் தாயாரின் சடலத்தை மறைத்து வைத்ததாக இன்றைய (ஜனவரி 30) ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.


