திருவாட்டி ஆங் சான் சூச்சி உட்பட தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தலைவர்களைக் கூடிய விரைவில் விடுதலை செய்யும்படி மியன்மாரின் ஜனநாயக தேசிய லீக் (National League for Democracy) கட்சியின் நிர்வாகக் குழு ஃபேஸ்புக் பதிவில் வெளியிட்ட செய்தியில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மியன்மாரில் நடத்தப்பட்ட தேர்தலில் ஜனநாயக தேசிய லீக் கட்சி பெற்ற வெற்றியை அங்கீகரிக்கவும் அதில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்தத் தேர்தலின் அடிப்படையில் நேற்று நாடாளுமன்ற முதல் அமர்வு நடைபெற இருந்த நிலையில், ஆங் சான் சூச்சி உட்பட ஜனநாயக தேசிய லீக் கட்சித் தலைவர்கள் ராணுவ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
திருவாட்டி ஆங் சான் சூச்சியின் கட்சியைச் சேர்ந்த 24 அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டதையும் 11 புதிய நியமனங்கள் பற்றியும் நேற்று மியன்மார் தேசிய தொலைக்காட்சியில் அறிவிக்கப்பட்டது.
மூன்று மாதங்களுக்கு முன்பு மியன்மாரில் நடைபெற்ற தேர்தலில் ஜனநாயக தேசிய லீக் கட்சி மோசடி செய்து வெற்றி பெற்றதாகக் கூறி கைது நடவடிக்கைகளுக்கு நியாயம் கற்பித்தது மியன்மார் ராணுவம்.
நாட்டின் முன்னாள் துணை அதிபரான ஜெனரல் மியிண்ட் சுவீ தற்காலிக அதிபராக இருந்தாலும் ராணுவத் தளபதி மின் ஆங் ஹிலைங்தான் இப்போது நாட்டின் பொறுப்பாளராக இருக்கிறார்.
உலக நாடுகள் பல இந்த நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்த வேளையில், விரைவில் நாட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துமாறும் அது இல்லாத பட்சத்தில் மியன்மார் மீது பொருளியல் தடைகள் விதிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தச் சூழலில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு மன்றம் அவசரக் கூட்டம் ஒன்றை இன்று நடத்தியது.