கொரோனா கிருமித் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நேற்று (பிப்ரவரி 2) முதல் 20 நாடுகளுக்கு எல்லைகளைத் தற்காலிகமாக மூடியுள்ளது சவூதி அரேபியா.
இன்று இரவு 9 மணி (சிங்கப்பூர் நேரப்படி நாளை அதிகாலை 2 மணி) முதல் அது நடப்புக்கு வருகிறது என்று உள்துறை அமைச்சு அறிவித்ததாக சவூதி பிரஸ் ஏஜென்சி தெரிவித்தது.
இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், இந்தோனீசியா, அமெரிக்கா, அர்ஜென்டினா, பிரேசில், ஜப்பான், தென்னாப்பிரிக்கா, எகிப்து, ஐக்கிய அரபு சிற்றரசுகள், லெபனான், துருக்கி, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி, போர்ச்சுகல், சுவீடன் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு இந்தத் தடை பொருந்தும்.
இந்த நாடுகளிலிருந்து வரும் சவூதி அரேபிய குடிமக்கள், பேராளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் போன்றோர், சவூதியில் நடப்பில் உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவர்.
அங்கு வசிப்போர் சுகாதாரக் கட்டுப்பாடுகளுக்கு இணங்கி நடக்காவிட்டால், புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று சவூதியின் சுகாதார அமைச்சர் டஃபிக் அல் ராபியா கடந்த ஞாயிற்றுக்கிழமை எச்சரித்த நிலையில், இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வளைகுடா நாடுகளிலேயே ஆக அதிகமாக சவூதி அரேபியாவில்தான் 368,000க்கும் அதிகமானோருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது; அங்கு சுமார் 6,400 பேர் தொற்றால் உயிரிழந்தனர்.
கடந்த ஜூன் மாதத்தில் நாள் ஒன்றுக்கு 5,000 வரை பதிவான கிருமித்தொற்று, இவ்வாண்டு ஜனவரி தொடக்கத்தில் அது 100க்கும் கீழே குறைந்தது. ஆனால் இப்போது அந்த எண்ணிக்கை மும்மடங்காகி உள்ளது. நேற்று அங்கு 310 பேருக்கு கொவிட்-19 உறுதி செய்யப்பட்டது.
கடந்த டிசம்பர் 17ஆம் தேதி முதல் அங்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.