வேளாண் சட்டங்களை இந்திய அரசாங்கம் திரும்பப் பெறக்கோரும் விதமாக நாடு முழுவதும் நேற்று 'சக்கா ஜாம்' என்ற பெயரில் நெடுஞ்சாலை மறியல் போராட்டத்தை விவசாயிகள் நடத்தினர். நாடு முழுவதும் முக்கிய நெடுஞ்சாலைகளில் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களது போராட்டத்தின்போது அவசர மருத்துவ வாகனங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் சென்ற வாகனங்கள், அத்தியாவசிய மற்றும் அவசர தேவைக்கான வாகனங்கள், பள்ளி வாகனங்கள் ஆகியவற்றை விவசாயிகள் தடுத்து நிறுத்தவில்லை. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் அமைதியான முறையில் போராட்டத்தை நடத்தப்போவதாக விவசாயிகள் முன்னதாக அறிவித்து இருந்தனர்.
மறியல் போராட்டத்தின்போது சாலையில் சிக்கிக்கொண்ட வாகனமோட்டிகளுக்கு உணவு, தண்ணீர் ஆகியவற்றை விவசாயிகள் வழங்கியதாகக் கூறப்பட்டது. டெல்லியில் அனைத்துப் போராட்டங்களும் மறியல் தளங்கள் போலவே காணப்படுவதால் டெல்லிக்குள் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படாது என்று விவசாய சங்கத்தினர் அறிவித்திருந்தனர். அதன்படி டெல்லியில் மறியல் போராட்டம் நடத்தப்படவில்லை. டெல்லியில் விவசாயிகள் ஏற்கெனவே போராட்டம் நடத்தி வருகிற இடங்களைத் தவிர, மற்ற பகுதிகளில் உள்ள சாலைகளில் போக்குவரத்து சீராக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்திய குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டதால் நேற்றைய விவசாயிகளின் சாலை மறியல் போராட்டத்தில் வன்முறைச் சம்பவங்கள் எதுவும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக நாடு முழுவதும் பாதுகாப்புப் பணிகளில் போலிசார் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
டெல்லியில் மட்டும் பாதுகாப்பு பணிகளுக்காக மொத்தம் 50,000 போலிசார் குவிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன. போராட்டத்தில் வன்முறை நிகழ்ந்துவிடக்கூடாது என்பதற்காக விவசாய சங்கங்களை சேர்ந்த முக்கிய தலைவர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர்.

