சோல்: தென்கோரியாவில் தலைநகர் சோலுக்கு வெளியே அரை மில்லியனுக்கும் அதிகமான உணவகங்கள், இதர வர்த்தகங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கொவிட்-19 கட்டுப்பாடுகள் நேற்று தளர்த்தப்பட்டன. இதனால் கூடுதலாக ஒரு மணி நேரம் அவை திறந்திருக்கலாம் என அந்நாட்டுப் பிரதமர் சுங் சாய் கியூன் தெரிவித்துள்ளார்.
தலைநகர் சோலுக்கு வெளியே செயல்படும் வர்த்தகங்கள் இரவு 10 மணி வரை செயல்படலாம் என்றாலும், தலைநகரில் இயங்கும் வர்த்தகங்கள் இரவு 9 மணிக்கு மூடுவதற்கான கட்டுப்பாடுகள் தொடர்ந்து நடப்பில் இருக்கும் என்று அவர் நேற்று கூறினார். அங்கு கொவிட்-19 நோய்த்தொற்று அபாயம் தொடர்ந்து நீடிப்பதே அதற்குக் காரணம் என்றார் அவர்.
உணவகங்கள், சிற்றுண்டிச்சாலை உள்புற உடற்பயிற்சிக்கூடங்கள், கராவோக்கே மதுபானக்கூடங்கள் உட்பட ஏறக்குறைய 580,000 வர்த்தகங்கள் அவற்றில் அடங்கும் என்று துணைச் சுகாதார அமைச்சர் காங் டோ டே செய்தியாளர்களிடம் கூறினார். இந்த வழிகாட்டி நெறிமுறைகளை மீறும் வர்த்தகங்கள் இரு வாரங்களுக்கு மூட உத்தரவிடப்படும் என்று அவர் எச்சரித்தார்.