மியன்மாரில் ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்த்து நேற்று இரண்டாவது நாளாக யங்கூன் நகரில் பல்லாயிரக்கணக்கானோர் பேரணியாகச் சென்றனர். கடந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் வென்ற திருவாட்டி ஆங் சான் சூச்சி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு உள்ளார். அவர் விடுவிக்கப்பட வேண்டும் எனக் கோரி நாடு முழுவதும் மேலும் பல்லாயிரக்கணக்கானோர் வீதிகளில் திரண்டனர்.
மியன்மாரில் 2007ஆம் ஆண்டில் பௌத்த பிக்குகள் வழிநடத்திய 'சஃப்ரொன்' புரட்சிக்குப் பிறகு நடத்தப்பட்ட ஆகப்பெரிய போராட்டங்கள் இவை. மியன்மார் ராணுவம் நேற்று முன்தினம் இணையத் தொடரை முடக்கிய நிலையிலும் போராட்டங்கள் தொடர்ந்தன.
மியன்மாரின் ஆகப்பெரிய நகரான யங்கூனில் சிவப்பு பலூன்களை ஏந்தியவாறு, "ராணுவ சர்வாதிகார ஆட்சி எங்களுக்கு வேண்டாம்! எங்களுக்கு ஜனநாயகம் வேண்டும்!" எனக் கூட்டத்தினர் முழக்கமிட்டனர். மியன்மாரில் கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரியளவில் வெற்றி பெற்ற திருவாட்டி சூச்சியின் தேசிய ஜனநாயக இயக்கக் கட்சியின் நிறமானது சிவப்பு. அந்தத் தேர்தலில் முறைகேடு நடந்ததாக குறைகூறிய ராணுவத் தலைவர்கள், தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்தனர்.
போராட்டக்காரர்கள் நேற்று திருவாட்டி சூச்சியின் கட்சிக்கொடிகளை அசைத்தவாறு மூன்று விரல்களை உயர்த்தி, ராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு மீதான தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
ஓட்டுநர்கள் தங்களது வாகனங்களில் ஒலி எழுப்பியவாறும் வாகனப் பயணிகள் திருவாட்டி சூச்சியின் படங்களை ஏந்தியவாறும் சென்றனர்.இணையத் தொடர்பு நேற்று பிற்பகல் வழக்கநிலைக்குத் திரும்பியதைத் தொடர்ந்து, போராட்டங்களைக் காட்டும் சில காட்சிகள் நேற்று ஃபேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டன. அந்தக் காட்சிகளைக் காணொளி எடுத்த ஒருவர், நாட்டில் ஆக அண்மைய நிலவரத்தைப் போராட்டக்காரர்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலம் அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் எனக் கூறினார்.
யங்கூனில் இருந்து ஏறக்குறைய 350 கிலோ மீட்டர் வடக்கே உள்ள நிர்வாகத் தலைநகர் நேப்பிடோவில் ராணுவத்திடம் இருந்து இந்தப் போராட்டங்கள் குறித்து நேற்று கருத்து எதுவும் வெளியிடப்படவில்லை.
தங்களது எதிர்காலத்திற்காக போராட தாங்கள் வீதிகளில் இறங்கியுள்ளதாக போராட்டக்காரர்கள் கூறினர். "ராணுவத்தினர் ஏற்கெனவே இணையத் தொடர்பை முடக்கிவிட்டனர். அவர்கள் தொடர்ந்து ஆட்சி செய்தால் கல்வி, வர்த்தகம், சுகாதாரம் போன்ற துறைகளிலும் பல அம்சங்களை அடக்கி ஒடுக்குவர். எனவேதான் நாங்கள் போராட்டத்தில் குதிக்க வேண்டியிருந்தது," என்று து து எனும் 57 வயது ஆடவர் ஒருவர் கூறினார்.

