வூஹான்: கொரோனா கிருமி தோன்றிய விதம் குறித்த விசாரணையில் ஈடுபட்டு வரும் உலக சுகாதார நிறுவனத்தின் விஞ்ஞானிகள், அதில் வூஹான் கடலுணவுச் சந்தைக்கு இருக்கும் பங்கு குறித்த முக்கிய தடங்களைக் கண்டறிந்துள்ளனர். இது குறித்து நியூயார்க்கின் விலங்கியல் சிறப்பு மருத்துவர் பீட்டர் டஸாக் கருத்து தெரிவித்து உள்ளார். தாம் திட்டமிட்டபடி பிப்ரவரி 10ஆம் தேதி சீனாவை விட்டு கிளம்புமுன் விசாரணையில் கண்டறியப்பட்ட முக்கிய அம்சங்கள் வெளியிடப்படும் என்றார் அவர். உலக சுகாதார நிறுவனம் அனுப்பிய குழுவுக்கு இவர் உதவி வருகிறார்.
2019 டிசம்பர் மாதம் கொவிட்-19 கிருமி உருவான சீனாவின் மத்திய நகரான வூஹானில் உரை நிகழ்த்திய அவர், கிருமி தோன்றிய விதம் குறித்து தமது 14 உறுப்பினர் குழு சீனாவின் நிபுணர்களுடன் இணைந்து முக்கியமான இடங்களுக்கும் ஆராய்ச்சி மையங்களுக்கும் சென்றதாகக் கூறினார்.
இவ்விவகாரத்தில் ‘என்ன நிகழ்ந்திருக்கிறது என்பதை உள்ளடக்கிய சில உண்மையான தடயங்களை’ கண்டறிய அந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் சொன்னார். “நூற்றாண்டு காணாத மோசமான நிலைமை உருவாகும் முன்னர் வூஹானில் கிருமி பரவியது எவ்வாறு என்பதே விசாரணையின் முக்கிய நோக்கமாக இருந்தது. எவ்வாறு நிகழ்ந்தது என்பதைப் பற்றிய ஆழமான புரிந்துணர்வு மேலும் இதுபோன்ற சம்பவம் நிகழாமல் உதவும்,” என்றார் அவர்.
கொவிட்-19 கொள்ளைநோய் உலகளவில் 105.7 மில்லியனுக்கும் மேற்பட்டோருக்குப் பரவிவிட்டது. 2.3 மில்லியன் பேர் உயிரிழந்துவிட்டனர். விலங்குகளில் இருந்து தோன்றிய கிருமி மனிதர்களுக்குத் தொற்றிய விதம் குறித்து அறிந்து உதவுமாறு கடந்த ஆண்டு மே மாதம் உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொள்ளப்பட்டது.