'டிக் டோக்' காணொளியால் வந்த சண்டை; கணவன் அடித்தார், மனைவி மடிந்தார்

'டிக் டோக்' காணொளியால் வந்த சண்டை; கணவன் அடித்தார், மனைவி மடிந்தார்

1 mins read
3ed93409-956a-49f5-aa5f-70a7a366cb80
படம்: ஊடகம் -

'டிக் டோக்' காணொளி ஒன்றின் தொடர்பில் கணவன் மனைவிக்கிடையே நிகழ்ந்த தகராறில் கணவன் அடித்து மனைவி உயிரிழந்த சம்பவம் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள வீடு ஒன்றில் கடந்த திங்கட்கிழமை நிகழ்ந்தது.

கணவன் தன் இரண்டாம் மனைவியுடன் சேர்ந்து எடுத்து வெளியிட்ட காணொளியை 'டிக் டோக்' சமூக ஊடகத்தில் பார்த்த முதல் மனைவி கோபம் கொண்டார்.

அதனையடுத்து கணவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் முதல் மனைவி. அன்றைய தினம் இரவு 10 மணியளவில் நடந்த சண்டையில், இந்தோனீசியரான முதல் மனைவி மயங்கி விழும் அளவுக்கு கணவர் அடித்ததாகக் கூறப்படுகிறது. அசைவின்றிக் கிடந்த மனைவியை அப்படியே விட்டுவிட்டு அந்த ஆடவர் அங்கிருந்து அகன்றார்.

நேற்று முன்தினம் பிற்பகல் 3.10 மணியளவில் கோலாலம்பூர் விளையாட்டரங்கத்துக்கு அருகில் மனைவியின் மரணத்துக்குக் காரணமானவர் என சந்தேகிக்கப்படும் அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார். 29 வயதான அவர் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒப்பந்தத் தொழிலாளி.

அவரது இரண்டாவது மனைவியான 45 வயது இந்தோனீசியப் பெண்மணியும் கிள்ளானில் உள்ள தாமன் கிள்ளான் உத்தமாவுக்கு அருகில் உள்ள கட்டுமானத் தளம் ஒன்றில் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் ஆறு நாட்களுக்கு விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த முதல் மனைவியின் உடலில் காயங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. உயிரிழப்புக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், பெண்ணின் உடல் மலாயா பல்கலைக்கழக மருத்துவ நிலையத்துக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்