ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் நிகழ்ந்த கடும் நிலநடுக்கத்தால் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் ரயில்களின் இயக்கம் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2011ஆம் ஆண்டில் ஃபுக்குஷிமாவில் நிகழ்ந்த பலத்த நிலநடுக்கத்தையும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியையும் நினைவுபடுத்துவதாக இந்த நிலநடுக்கம் இருப்பதாக மக்கள் தெரிவித்தனர்.
நேற்று (சனிக்கிழமை) இரவு உள்ளூர் நேரப்படி 11.08 மணிக்கு ஏற்பட்ட 7.3 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்தால் சுவர்கள் இடிந்தன, சன்னல்கள் உடைந்து சிதறின. நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகில் ஃபுக்குஷிமாவில் நிலச்சரிவும் ஏற்பட்டது.
நில நடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு சில நூறு கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள ஜப்பானிய தலைநகரம் தோக்கியோவிலும் அதன் அதிர்வுகள் உணரப்பட்டன.
பல்லாயிரக்கணக்கான கட்டடங்களில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. பல்லாயிரம் வீடுகளுக்கு தண்ணீர் விநியோகம் தடைப்பட்டதால், பலர் பிளாஸ்டிக் கலன்களுடன் தண்ணீருக்காக வரிசைபிடித்துக் காத்திருந்ததாகக் கூறப்பட்டது.
குறைந்தபட்சம் 104 பேர் காயமடைந்ததாக உள்ளூர் தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், யாரும் உயிரிழந்தாகத் தகவல் இல்லை.