மலேசியாவில் நாள் ஒன்றுக்கு 126,000 பேருக்கு தடுப்பூசி போடத் திட்டம்

மலேசியாவில் நாள் ஒன்றுக்கு 126,000 பேருக்கு தடுப்பூசி போடத் திட்டம்

2 mins read
16cf08d9-d266-4414-8563-3e55e1eba76a
சுகாதார மருந்தகங்கள், அரசாங்க மற்றும் தனியார் மருத்துவமனைகள் போன்ற 600 அத்தகைய நிலையங்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதம் பாபா தெரிவித்தார். படம்: ஏஎஃப்பி -

நாள் ஒன்றுக்கு 126,000 பேர் வரை தடுப்பூசி போடத் திட்டமிடுகிறது மலேசியா. இந்த மாத இறுதியில் தொடங்கவிருக்கும் தேசிய அளவிலான கொவிட்-19 தடுப்பூசி திட்டத்தில் நாடு முழுவதும் அமைக்கப்படும் 600 தடுப்பூசி நிலையங்களில் தடுப்பூசி போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார மருந்தகங்கள், அரசாங்க மற்றும் தனியார் மருத்துவமனைகள் போன்ற 600 அத்தகைய நிலையங்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதம் பாபா தெரிவித்தார்.

ஒவ்வொரு நிலையத்திலும் 7 பேர் தடுப்பூசி போட நியமிக்கப்படுவர். அவர்களில் ஒவ்வொருவரும் நாள் ஒன்றுக்கு 30 பேருக்கு தடுப்பூசி போடுவர் என்று கணக்கில் கொள்ளப்பட்டு, ஒவ்வொரு நிலையத்திலும் சுமார் 210 பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஜோகூரின் குலாய் பகுதியில் உள்ள சினாய் தொழிற்பேட்டையில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவிடுதிகளைப் பார்வையிட்டபோது அமைச்சர் செய்தியாளர்களிடம் இந்தத் தகவல்களை நேற்று (பிப்ரவரி 13) தெரிவித்தார்.

ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியைப் பெறுவதில் தாமதம் எதுவும் இருக்காது என்று அமைச்சர் தெரிவித்தார்.

பிப்ரவரி 26ஆம் தேதி முதல் மலேசியாவில் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கும் எனவும் முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் 32 மில்லியன் மக்கள்தொகையில் 80 விழுக்காட்டினருக்கு தடுப்பூசி போடத் திட்டமிடப்படுவதாக இம்மாதம் 4ஆம் தேதி பிரதமர் முகைதீன் யாசின் குறிப்பிட்டிருந்தார்.

மூன்று கட்டங்களாக போடப்படும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது.

ஏப்ரல் வரை தொடரும் முதற்கட்டத்தில் சுமார் 500,000 முன்களப் பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வர்.

ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான இரண்டாம் கட்டத்தில் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்தோர் உட்பட அதிக அபாயத்துக்கு உட்படும் சாத்தியமுடையோருக்கு தடுப்பூசி போடப்படும்.

வரும் மே முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை இடம்பெறவுள்ள மூன்றாவது கட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படும்.

சுமார் 3 மில்லியன் வெளிநாட்டினருக்கும் மலேசியாவில் தடுப்பூசி போடப்படும் எனக் குறிப்பிட்ட அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுதீன், அவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் தேதி பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

குறிப்புச் சொற்கள்