நியூசிலாந்துடனான இருவழி பயண ஏற்பாட்டை ஆஸ்திரேலியா தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.
நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் சமூக அளவில் மூவருக்கு கொவிட்-19 பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, ஆஸ்திரேலியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
புதிதாக சிலருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டதை அடுத்து நியூசிலாந்தின் ஆகப் பெரிய நகரமான ஆக்லாந்தில் நேற்று முன்தினம் முடக்கநிலை அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று தொடங்கி அடுத்த 72 மணி நேரத்துக்கு நியூசிலாந்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வரும் அனைத்து விமானங்களும் உச்சக்கட்ட விழிப்புநிலையுடன் கண்காணிக்கப்படும் என்று ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான ஆஸ்திரேலியாவின் தலைமை மருத்துவ அதிகாரி பால் கேலி நேற்று முன்தினம் அவசர கூட்டம் ஒன்றை நடத்தினார்.
“அடுத்த மூன்று நாட்களில் ஆஸ்திரேலியாவிலிருந்து நியூசிலாந்துக்குள் வரும் பயணிகள் அரசாங்க அதிகாரிகள் மேற்பார்வையின்கீழ் இயங்கும் ஹோட்டல்களில் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவர்,” என்று ஆஸ்திரேலிய சுகாதாரத் துறை தெரிவித்தது.
ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் நியூசிலாந்துப் பயணிகள் ஹோட்டல்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படாமல் இருக்க இந்த இருவழி பயண ஏற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் நியூசிலாந்துக்குச் செல்லும் ஆஸ்திரேலியப் பயணிகளைத் தனிமைப்படுத்தும் விதிமுறை தொடர்ந்து நடப்பில் இருந்து வருகிறது.
இதற்கிடையே, பிரிட்டனில் பரவி வரும் உருமாறிய கொவிட்-19 கிருமியால் நியூசிலாந்தில் இருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நேற்றிலிருந்து நியூசிலாந்தில் முடக்கநிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
உருமாறிய கொவிட்-19 கிருமியால் பாதிக்கப்பட்ட இருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் நியூசிலாந்தில் இதுவரை அடையாளம் காணப்பட்டோருடன் தொடர்புடையவர்கள் அல்லர் என்றும் அதிகாரிகள் கூறினர்.