மியன்மாரில் ஆளும் அரசாங்கத்தைக் கவிழ்த்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள ராணுவத்தை ஐநா கடுமையாக எச்சரித்துள்ளது.
அமைதியாக நடைபெறும் மக்கள் ஆர்ப்பாட்டங்களை மதிக்க வேண்டும் என்று அது வலியுறுத்தியது.
தொலைபேசியில் பேசிய ஐநாவுக்கான சிறப்பு தூதர் கிறிஸ்டைன் ஷ்ரானெர் பர்கெனர், மக்களை ஒடுக்கும் நடவடிக்கைகளுக்கு விளைவுகளைச் சந்திக்க வேண்டி யிருக்கும் என்றார்.
இரண்டாவது நாளாக தொடர்ந்து இணையத் தொடர்பு துண்டிக்கப்பட்ட பிறகு இன்று காலை வழக்க நிலைக்குத் திரும்பியது.
பிப்ரவரி 1ஆம் தேதி ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து அடிக்கடி இணையத் தொடர்பை ராணுவம் நிறுத்தி வருகிறது.
சென்ற திங்கட்கிழமை அன்று ராணுவ துணைத் தலைவர் சோ வின்னிடம் திரு ஷ்ரானெர் பர்கெனர் தொலைபேசியில் பேசியதாக ஐநா பேச்சாளர் ஒருவர் கூறினார்.
இணையத் தொடர்புகளைத் துண்டிப்பது ஜனநாயகத்தின் அடிப்படை கோட்பாடுகளை கீழறுக்கும் செயலாகும் என்று சிறப்பு தூதர் தமது பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.
இன்றும் ராணுவத்துக்கு எதிராக மக்கள் சாலைகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் ஆட்சிக் கவிழ்ப்பு தலைவர்களை எதிர்ப்பவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படும் என்று ராணுவ அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தேர்தலில் முறைகேடுகளை செய்து வெற்றி பெற்றுள்ளதால் ஆங் சான் சூச்சி உள்ளிட்ட தலைவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ராணுவம் கூறுகிறது. ஆனால் முறைகேடு தொடர்பாக ராணுவம் இதுவரை எந்தவித ஆதாரத்தையும் வெளியிடவில்லை.

