அரசாங்கப் பணிகளை முடக்கும் வகையிலான வேலை நிறுத்தப் போராட்டங்களை நடத்த ஊக்குவித்த ஆறு பிரபலங்களுக்கு எதிராக மியன்மார் ராணுவம் கைதாணை பிறப்பித்துள்ளது.
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட அரசு ஊழியர்களை ஊக்குவித்த காரணத்துக்காக அவர்களைக் கைது செய்ய முடிவெடுத்திருப்பதாக ராணுவம் கூறியது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
மியன்மாரில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை அந்நாட்டு ராணுவம் கவிழ்த்தது. ராணுவ ஆட்சிக்குக் கண்டனம் தெரிவித்து பல அரசாங்க ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கினர்.
இதை எதிர்கொள்ளும் வகையில் இதுவரை கிட்டத்தட்ட 500 பேரை மியன்மார் ராணுவம் கைது செய்துள்ளது.
நேற்று முன்தினம் மியன்மாரின் இரண்டாவது ஆகப் பெரிய நகரமான மெண்டலேயில் வேலை நிறுத்தப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்ட ரயில் சேவை ஊழியர்கள் ரயில்களை நிறுத்தினர். அவர்
களைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் ரப்பர் தோட்டாக்களால் சுட்டனர். இதன் காரணமாக ஒருவர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. ஆட்சிக் கவிழ்ப்பையும் மியன்மார் தலைவர் ஆங் சான் சூச்சி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதையும் கண்டித்து ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆறு அலைபேசிகளை சட்டவிரோதமாக மியன்மாருக்குள் இறக்குமதி செய்ததாக திருவாட்டி சூச்சி மீது குற்றம் சுமத்தப்பட்டது. இயற்கைப் பேரிடர் நிர்வாகச் சட்டத்தை மீறியதாக தற்போது அவர் மீது இன்னொரு குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. அடுத்த மாதம் 1ஆம் தேதியன்று அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மியன்மார் ராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் அரசாங்கத்துக்குச் சொந்தமான பல இணையத்தளங்களை இணைய ஊடுருவிகள் ஊடுருவி உள்ளனர்.
மத்திய வங்கியின் இணையப்பக்கம், மியன்மார் ராணுவத்தின் கொள்கை பரப்பு இணையப்பக்கம், அரசாங்க ஊடகத்தின் இணையப்பக்கம், துறைமுக ஆணையத்தின் இணையப்பக்கம், உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் இணையப்பக்கம் ஆகியவை ஊடுருவப்பட்டன.