கொட்டும் பனியில், பனிப்புயலையும் பொருட்படுத்தாமல் கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டார் 90 வயதான அமெரிக்க மூதாட்டி ஒருவர்.
சியாட்டிலைச் சேர்ந்த ஃப்ரான் கோல்ட்மேன் தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பி முதல் தவணை தடுப்பூசி போட முன்பதிவு செய்ய பெருமுயற்சி எடுத்தார். பல தொலைபேசி அழைப்புகளுக்குப் பிறகு கடந்த ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி போட்டுக்கொள்ள அவருக்கு முன்பதிவு செய்யப்பட்டது.
கொட்டும் பனியில், பனிபடிந்த சாலைகள் அவரது மன உறுதியைக் குலைத்துவிடவில்லை. தாம் சிரமப்பட்டு செய்த முன்பதிவை வீணாக்க விரும்பவில்லை அவர்.
மருத்துவமனைக்கு காரில் செல்வதற்கான காலநிலை இல்லை என்பதால் சனிக்கிழமை சுமார் 5 கி.மீ. தூரத்துக்கு நடந்து பார்த்து தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டார் கோல்ட்மேன்.
ஓராண்டுக்கு முன்பு இடுப்பெலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவர், ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனைக்குப் புறப்பட்டார். பயணத்துக்கான உடைகள், காலணிகள் ஆகியவற்றை அணிந்ததுடன் இரண்டு நடை குச்சிகளையும் எடுத்துக்கொண்டு கிளம்பினார்.
9.6 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்ற அவர் மருத்துவமனையை அடைந்த அவரால், முன்பதிவு செய்த நேரத்தைவிட 5 நிமிடம் தாமதமாகத்தான் சென்று சேர முடிந்தது.
பொதுவாகவே தடைகளைக் கண்டு அஞ்சாமல் அவற்றைத் தகர்த்தெறிந்து முன்னேறும் பழக்கம் கொண்ட அவரை, பனிப்பொழிவும் தூரமும் தடுப்பூசி போட்டுக்கொள்வதிலிருந்து தடுத்துவிடாது என்று அவரது மகள் ரூத் குறிப்பிட்டார்.