லண்டன்: ஐநா பாதுகாப்பு மன்றம் நாளை (பிப்ரவரி 23) உலகத் தலைவர்களின் உச்சநிலைக் கூட்டம் ஒன்றை நடத்த உள்ளது. பருவநிலை மாற்றங்கள் உலக நாடுகளின் அமைதியில் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து 15 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் அக்கூட்டத்தில் பங்கேற்று கருத்துகளைப் பரிமாறிக்கொள்வார்கள்.
இணைய காணொளி வழியாக நடைபெற இருக்கும் இந்தக் கூட்டத்திற்கு பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்பு விடுத்திருந்தார்.
பாதுகாப்பு மன்றத்தின் தலைமைத்துவம் சுழற்சி முறையில் மாறிக்கொண்டே வரும். தற்போது பிரிட்டன் அதனை ஏற்றுள்ளது. அமெரிக்க பருவநிலை நிபுணர் ஜான் கெரி, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, பிரெஞ்சு அதிபர் இமானுவல் மக்ரோன், அயர்லாந்து, வியட்னாம், நார்வே ஆகிய நாடுகளின் பிரதமர்கள் உள்ளிட்ட தலைவர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
அமெரிக்க-சீன உறவின் நிலை குறித்து இந்தக் கூட்டத்தின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம் என ஐநா தூதர் ஒருவர் கூறினார். அதிகார பலமிக்க அவ்விரண்டு நாடுகளும் ஒப்புக்கொள்ள வேண்டிய சில பிரச்சினைகளும் விவாதப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.