மலேசியாவின் கொவிட்-19 தடுப்பூசித் திட்டம் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான பயணத்தை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துச் செல்ல உதவும் என்று ஜோகூர் மாநில அரசாங்கம் கருதுகிறது.
இரு நாட்டு எல்லையைத் திறக்கும் நடவடிக்கை ஜோகூரின் பொருளியலை ஊக்கப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று அதன் முதல்வர் ஹாஸ்னி முகம்மது தெரிவித்து உள்ளார்.
“இரு நாடுகளின் மக்களும் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் சிங்கப்பூர்-மலேசியா இடையிலான அவர்களின் நடமாட்டம் எளிதானதாகவும் பாதுகாப்பானதாகவும் அமையும்,” என்றார் அவர்.
மலேசியா கடந்த ஆண்டு மார்ச் 18ஆம் தேதி முதல்முறையாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைப் பிறப்பித்தது முதல் சிங்கப்பூருடனான அதன் எல்லை மூடப்பட்டு உள்ளது. தற்போது சரக்கு வாகனங்கள் மட்டும் தரை வழியாக தினமும் எல்லை கடந்து வரவும் செல்லவும் அனுமதிக்கப்படுகின்றன.
மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்படுத்தப்பட்டு உள்ள மையங்களில் தடுப்பூசி போடும் திட்டத்திற்கு தமது அரசாங்கம் தயாராகி வருவதாகவும் திரு ஹாஸ்னி கூறினார்.
திட்டம் தொடங்கும்போது தாமும் தமது நிர்வாக மன்றத்தில் உள்ளோரும் தடுப்பூசிப் போட்டுக் கொள்ள இருப்பதாக அவர் தெரிவித்தார்.
மலேசியா முதல் தவணையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை 300,000 முறை போடக்கூடிய ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டது.
மேலும் 182,520 முறை போடக்கூடிய தடுப்பூசியை அது இன்று புதன்கிழமை பெறக்கூடும் என்று பெர்னாமா செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
நாளை மறுதினம் வெள்ளிக் கிழமை தடுப்பூசி போடும் நடவடிக்கையைத் தொடங்கத் திட்டமிட்டிருந்த மலேசியா முன்கூட்டியே இன்று புதன்கிழமை அதனைத் தொடங்கும் என்று தடுப்பூசித் திட்டத்தை வழிநடத்தும் அமைச்சர் கைரி ஜமாலுதீன் அறிவித்திருந்தார்.