கொவிட்-19 காரணமாக அமெரிக்காவில் மாண்டோர் எண்ணிக்கை 500,000ஐ கடந்துள்ளது. அமெரிக்காவில்தான் ஆக அதிகமான கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன.
கிருமித்தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. மாண்டோருக்கு அஞ்சலி செலுத்தி உரையாற்றினார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
“இத்தகைய கொடூரமான நிலையை அமெரிக்கர்களால் ஏற்க முடியவில்லை. இருப்பினும், ஏற்பட்டுள்ள பேரிழப்பால் அமெரிக்கா முடங்கிவிடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.
“இந்த இழப்பை நினைவில் வைத்துக்கொள்ளும்படி அனைத்து அமெரிக்கர்களையும் கேட்டுக்கொள்கிறேன். மாண்டவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்,” என்றார் திரு பைடன்.
மாண்டோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வெள்ளை மாளிகையின் வாசலில் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டிருந்தன.
அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ், அவரது கணவர் டக் எம்ஹாஃப் ஆகியோர் மெழுகுவர்த்திகள் அருகில் நின்று ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். 28.1 மில்லியன் அமெரிக்கர்கள் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
“இன்று மனதை சுக்குநூறாக உடைக்கும் நிலை அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது. கிருமித்தொற்றால் 500,071 பேர் உயிரிழந்துவிட்டனர்.
“மரணம் அடைந்தவர்கள் சாதாரண அமெரிக்கர்கள் என பலர் கூறுவதைக் கேட்டுள்ளேன். சாதாரண அமெரிக்கர்கள் என யாரும் கிடையாது. மாண்டவர்கள் சாமானியர்கள் அல்லர். அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தன்மைவாய்ந்தவர்கள். அவர்களது முன்னோர்கள் அமெரிக்காவில் வாழ்ந்தவர்கள். சிலர் அமெரிக்காவில் பிறந்தவர்கள், சிலர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர்கள். மாண்டவர்களின் உயிர் அமெரிக்காவில் பிரிந்தது,” என்று அதிபர் பைடன் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
மாண்டோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தலைநகர் வாஷிங்டனில் 500 தடவை மணி ஒலிக்கப்பட்டது. இதற்கிடையே, தடுப்பூசித் திட்டம் தொடங்கியதிலிருந்து அமெரிக்காவில் கொவிட்-19ஆல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது.