பாகிஸ்தானின் கராச்சி நகரத்தில் உள்ள சாலைகளில் திருட்டு, பொதுமக்களுக்குத் தொல்லை விளைவிக்கும் குற்றங்களைத் தடுக்க அந்நகர போலிஸ் படை புதிய உத்தி ஒன்றைக் கையாண்டு வருகிறது.
‘ரோலர்பிளேடிங்’ எனும் சறுக்குக் காலணிகளைப் பயன்படுத்தி சுற்றுக்காவலில் ஈடுபடும் புதிய போலிஸ் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
“சாலைகளில் நடக்கும் குற்றங்களைத் தடுக்க புத்தாக்கமிக்க அணுமுறையைக் கையாள வேண்டும் என நாங்கள் ஒரு முடிவுக்கு வந்தோம்,” என்று புதிய பிரிவின் தலைவர் ஃபரூக் அலி தெரிவித்தார். மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் செல்ல முயலும் திருடர்களை விரட்டிச் சென்று மடக்கிப் பிடிக்க இந்த ‘ரோலர்பிளேடிங்’ உத்தி கைமேல் பலனைத் தரும் என்றார் அவர். ஆனால் கராச்சியில் உள்ள அனைத்துப் பகுதி
களிலும் இந்த உத்தியைக் கையாள முடியாது என்று அவர் தெரிவித்தார். சீரற்ற சாலைகள், நடைபாதைகள் ஆகியவை இதற்குக் காரணம் என அவர் கூறினார். ஆனால் குற்றங்கள் அதிகம் நிகழும் இடங்களுக்கு ரோலர்
பிளேடு பிரிவு அதிகாரிகள் அனுப்பிவைக்கப்படுவர் என்றார் அவர். ஒவ்வோர் அதிகாரியும் கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோலர்பிளேடுகளைப் பயன்படுத்தி போலிஸ் அதிகாரிகள் சுற்றுக்காவலில் ஈடுபடுவது தங்களுக்குப் பாதுகாப்பு உணர்வைத் தருவதாக கராச்சியைச் சேர்ந்த முகம்மது அஸீம் தெரிவித்தார். கராச்சி மக்களிடையே இப்புதிய உத்திக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.