ஜெர்மனியில் உள்ள கோலோக்னி பல்கலைக்கழகத்தில் ‘இந்தியவியல் மற்றும் தமிழ்ப் படிப்புகள்’ துறையில் மாணவர்கள் தொடர்ந்து தமிழ் பயின்று வருகின்றனர். 1963ஆம் ஆண்டில் பேராசிரியர் டாக்டர் கிளாவுஸ்-லுட்விக் ஜேனர்ட் என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகத்தில் 40,000க்கு மேற்பட்ட தமிழ்ப் புத்தகங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும் அந்தத் துறை மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் பேராசிரியர் டாக்டர் உல்ரிக் நிக்லஸ் ஓய்வு பெற்ற பிறகு அந்தத் துறையின் செயல்பாட்டைப் புதுப்பிக்கப்போவதில்லை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, பல்கலைக்கழகத்தில் அந்தத் துறை தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்ய ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள தமிழ்ச் சங்கங்கள் முயற்சி எடுத்து வருகின்றன.
ஐரோப்பாவில் உள்ள புலம்பெயர் தமிழர்களின் சம்மேளனமான ஐரோப்பிய தமிழர்கள் சங்கமும் அந்த முயற்சியில் இணைந்துள்ளது.
ஃபிராங்க்ஃபர்ட் வட்டாரத்தில் உள்ள தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் ஸ்ரீதர், “பல்கலைக்கழக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதுடன் நிதி திரட்டு பிரசாரத்துக்கும் திட்டமிடுவதாக,” குறிப்பிட்டுள்ளார். இதன் தொடர்பில் இந்திய அரசிடமும் உதவிகோரத் திட்டமிடப்பட்டுள்ளது.
அந்தத் துறை தொடர்ந்து செயல்பட இவ்வாண்டு மார்ச் மாதத்துக்குள் €137,500 தேவைப்படுகிறது.
இந்தக் காரணத்துக்காக நிதி வழங்க விரும்புவோர் https://www.betterplace.org/en/projects/90770-save-cologne-tamil-studies என்ற இணைப்பை நாடலாம்.