அரசாங்கத்தை ராணுவம் கைப்பற்றியது முதல் மியன்மார் போராட்டக்களமாக மாறிவிட்டது. மூன்று வார காலமாக ஒவ்வொரு நாளும் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் நடைபெற்று வருகிறது.
வியாழக்கிழமை ராணுவ ஆட்சிக்கு ஆதரவான சுமார் 1,000 பேர் எதிர்ப்பாளர்களை ஒடுக்க களமிறக்கப்பட்டனர்.
கையில் கத்தியுடனும் கற்களை வீசியும் போராட்டத்திற்கு எதிர் போராட்டம் நடத்தியதால் யங்கூன் நகரம் பெரும் பதற்றத்தில் மூழ்கியது. இருவருக்குக் கத்திக்குத்து விழுந்ததை காணொளிப் படங்கள் காட்டின.
பல இடங்களில் துப்பாக்கித் தோட்டா வெடிக்கும் சத்தம் கேட்டதாகவும் பின்னிரவு 2 மணி வரை சில பகுதிகளில் போலிஸ் படை காணப்பட்டதாகவும் சம்பவங்களை நேரில் கண்டவர்கள் ஊடகங்களிடம் கூறினர்.“நாங்கள் பயத்தில் உறைந்திருந்தோம்,” என்று ஒரு குடியிருப்பாளர் கூறினார்.
வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் பத்து பெண்கள் உள்ளிட்ட 23 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக அரசாங்க ஊடகம் கூறியது.
இந்நிலையில், ராணுவ ஆட்சி ஏற்பட்ட பின்னர் அங்குள்ள திட்டங்களை நிறைவேற்றுவதற்கான நிதி உதவியை உலக வங்கி நிறுத்தி உள்ளது. மிகவும் எச்சரிக்கையான போக்கு கடைப்பிடிக்கப்படும் என்றும் அவசரகால கொரோனா நிவாரணத் திட்டம் உள்ளிட்ட முன்னர் ஒப்புக்கொள்ளப்பட்ட திட்டங்களுக்கான உதவி தொடரும் என்றும் உலக வங்கி தலைவர் ேடவிட் மால் பாஸ் அண்மையில் கூறி இருந்தார்.
இதற்கிடையே, அரசாங்க ஊழியர்களும் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளதால் அரசாங்க அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகிவதாகவும் பொது மருத்துவமனைகளில் ஆள் நடமாட்டம் இல்லை எனவும் ஏஎஃப்பி செய்தி கூறியது.