ஏழை நாடுகளின் மருத்துவமனைகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை எதிர்நோக்குகின்றன. அதனால் 500,000க்கும் அதிகமான கொவிட்-19 நோயாளிகளுக்கு ஒவ்வொரு நாளும் ஆக்ஸிஜன் சிகிச்சை தேவைப்படுகிறது. மேலும் சில நாடுகளில் ஆக்ஸிஜன் கிடைப்பதே குதிரைக்கொம்பாக உள்ளது. இவ்வாறான நிலையில் அந்த நாடுகள் கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது கேள்விக்குறியாகியுள்ளது.
இதுபோன்ற நாடுகளில் நோயாளிகள் உயிரிழப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அக்கறை தெரிவித்துள்ளது.
மெக்சிகோ நாட்டின் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கொவிட்-19 நோயாளிகள் வீட்டில் தங்கி, சிகிச்சை அளிக்கப்படாமல் மாண்டுவிடும் நிலை ஏற்படுகிறது.
எகிப்து நாட்டின் மருத்துவமனைகளில் கடந்த மாதம் ஆக்ஸிஜன் விநியோகம் தடைபட்டதால் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
அதேபோல் பிரேசிலின் அமேசோனாஸ் மாநிலத்தில் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஏராளமான தொற்று நோயாளிகள் மரணத்தைத் தழுவினர். ஆக்ஸிஜன் பற்றாக்குறையை ஒரு துயரச்சம்பவம் என்றும் அதைப்போக்குவதற்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் அனைத்து நிலைகளிலும் மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது என்றும் அந்நாட்டின் சுகாதார முறைப்படுத்தும் முகவையின் இயக்குநர் டாக்டர் அலெக் மச்சாடோ கேம்பஸ் கூறியுள்ளார். ஆக்ஸிஜன் பற்றாக்குறையை போக்க சிறப்புப் பணிக்குழு ஒன்றை அமைத்துள்ளது உலகச் சுகாதார நிறுவனம். இந்தப் பணிக்குழு, ஆக்ஸிஜன் பற்றாக்குறையை எதிர்நோக்கும் ஆப்கானிஸ்தான், மலாவி, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளுக்கு உதவ US$90 (S$119.31) மில்லியன் ஒதுக்கியுள்ளது. அடுத்த 12 மாதங்களில் உலகம் முழுவதும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை எதிர்நோக்கும் நாடுகளுக்கு உதவ US$1.6 பில்லியன் செலவாகும் என்று அந்த நிறுவனம் கணித்துள்ளது. பல நாடுகள் கொவிட்-19 நெருக்கடிக்கு முன்பிருந்தே ஆக்ஸிஜன் பற்றாக்குறையை எதிர்நோக்கி வருகின்றன. அந்த நாடுகளுக்கு அவசரகால உதவி அடிப்படையில் நிதி வழங்கப்படும் என ஜெனிவாவை மையமாகக் கொண்ட உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் பிலிஃப் டன்டன் கூறியுள்ளார். நாம் ஒரு நிலையான கடப்பாட்டுடன் ஏழை நாடுகளுக்கு உதவுவதற்கு ஒரு கட்டமைப்பை உருவாக்க ஒன்றிணைய வேண்டும் என்று அவர் உலக நாடுகளைக் கேட்டுக் கொண்டார்.