பேங்காக்: தாய்லாந்தில் கடந்த 2014ஆம் ஆண்டு நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதை அடுத்து அங்கு ராணுவம் அப்போதைய ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு ராணுவ ஆட்சியை அமைத்தது.
அந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டு ஆட்சிக்கவிழ்ப்புக்கு வழிவிட்டதாகக் கூறி மூன்று அமைச்சர்கள் மீது கிளர்ச்சியில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. மக்கள் ஜனநாயக சீர்திருத்த இயக்கம் என்ற அமைப்பைச் சேர்ந்த மின்னிலக்க அமைச்சர் புட்டிபோங் புன்னாகந்தா, கல்வி அமைச்சர் நாட்டபோல் தீப்சுவான், துணை போக்குவரத்து அமைச்சர் தாவோர்ன் செனியாம் ஆகியோர் குற்றம் புரிந்துள்ளனர் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு அவர்களுக்கு தாய்லாந்து குற்றவியல் நீதிமன்றம் புதன்கிழமையன்று சிறைவாசம் விதித்தது.
அந்த மூன்று அமைச்சர்களுக்கும் தற்போது பிணை வழங்கப்பட்டுள்ளதாக அவர்களின் வழக்கறிஞர் கூறியுள்ளார். இந்த மூவரும் பின்னர் பிரதமர் சான் ஓ சா தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
இவர்களும் மக்கள் ஜனநாயக சீர்திருத்த இயக்கத்தைச் சேர்ந்த மற்றவர்களும் கிளர்ச்சியில் ஈடுபட்டது, தேர்தலுக்கு இடையூறு விளைவித்தது, ஆர்பாட்டங்களின்போது அரசாங்க அலுவலகங்களில் புகுந்தது போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாய்லாந்து மன்னர் ஆதரவாளர்கள், தாய்லாந்து தேசியவாதிகள் எனக் கூறிக் கொள்பவர்களைத் திரட்டி தற்போதைய பிரதமர் சான் ஓ சா பதவிக்கு வருவதற்கு உதவியதாக ராய்ட்டர்ஸ் செய்தித் தகவல் கூறுகிறது.
அதன்பின்னர், திரு சான் ஓ சா தாய்லாந்து நாட்டில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் பதவியில் நீடித்து வருகிறார்.
எனினும், அந்த ஆண்டு நடைபெற்ற தேர்தல் ராணுவம் பதவிக்கு வர ஏதுவாக பாரபட்சமான முறையில் நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இதை பிரதமர் சான் ஓ சா மறுத்துள்ளார்.
எனினும், குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்ட இந்த அமைச்சர்களும் இயக்கத்தைச் சேர்ந்த மற்றவர்களும் நாட்டை விட்டு ஓடும் அபாயம் இல்லை என்பதால் இவர்களுக்கு பிணை வழங்குவதாக மேல்முறையீட்டு நீதிமன்றம் கூறியுள்ளது.
அத்துடன் இவர்கள் அனைவருக்கும் பிணைத் தொகையாக 800,000 பாட் (S$35,000) நிர்ணயித்துள்ளது.
இதைத் தெரிவித்த அந்த மூவரின் வழக்கறிஞர், அவர்கள் மூவரும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இம்மூவருக்குப் பதிலாக தற்காலிகமாக வேறு மூவரை அமைச்சர்களாக நியமிக்க உள்ளதாக பிரதமர் சான் ஓ சா விளக்கமளித்துள்ளார்.