மியன்மாரில் ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிராக நாளுக்கு நாள் ஆர்ப்பாட்டங்கள் வலுவடைந்து வரும் வேளையில், ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க நேற்று போலிசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க போலிசார் ரப்பர் தோட்டாக்களைக் கொண்டு சுட்டதாக ஏஎஃப்பி செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார். அதன் பிறகு மாது ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
போலிசார் உண்மையான தோட்டாக்களைக் கொண்டு சுட்டனரா என்பது பற்றிய தெளிவான தகவல் இல்லை.
முன்னதாக மியன்மாரில் ஜனநாயகம் மீண்டும் நிலைநாட்டப்பட வேண்டும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனத்துக்கான மியன்மார் தூதர் குயாவ் மோ தூன் கேட்டுக்கொண்டார்.
ஆட்சிக்கவிழ்ப்பு நடத்திய மியன்மார் ராணுவத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி ஐக்கிய நாட்டு நிறுவனப் பாதுகாப்பு மன்றத்தையும் அனைத்துலகச் சமூகத்தையும் அவர் கேட்டுக்கொண்டார்.
மியன்மார் தலைவர் திருவாட்டி ஆங் சான் சூச்சி சார்பில் தாம் பேசியதாகக் கூறிய அவர், ராணுவத்திற்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதை எடுக்குமாறு ஐக்கிய நாட்டிடம் முறையிட்டார்.
இதற்கிடையே, ஆட்சிக்கவிழ்ப்புக்கு பிறகு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த திருவாட்டி சூச்சி தம்முடைய இல்லத்தில் இருந்து வேறோர் இடத்துக்கு மாற்றப்பட்டதாக அந்நாட்டு ஊடக அறிக்கைகள் கூறின.
நிர்வாகத் தலைநகர் நேப்பிடோவில் வசித்த அவரை ராணுவ அதிகாரிகள் சுமார் ஒரு வாரத்துக்கு முன்னரே வேறோர் இடத்திற்குக் கொண்டு சென்றுவிட்டதாகக் கூறப்பட்டது. இருப்பினும், திருவாட்டி சூச்சி எங்கு கொண்டு செல்லப்பட்டார் என்பது குறித்த விவரம் எதுவுமில்லை.
நாட்டின் இறக்குமதி, ஏற்றுமதிச் சட்டங்களை அவர் மீறியதாகவும் ஆட்சிக்கவிழ்ப்பு நடத்தப்பட்ட பிப்ரவரி 1ஆம் தேதி அவரது வீட்டில் சட்டவிரோதமான தகவல் தொடர்புச் சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.