சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான், அந்நாட்டுச் செய்தியாளர் ஜமால் கஷோகியின் கொலைக்கு ஒப்புதல் அளித்ததாக அமெரிக்க புலனாய்வுத் துறை தகவல் வெளியிட்டு உள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழுக்குக் கட்டுரைகளை எழுதி வந்த திரு கஷோகி, சவூதி பட்டத்து இளவரசரின் கொள்கைகளை விமர்சித்து எழுதி இருந்தார். 2018ஆம் ஆண்டில் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவூதி துணைத் தூதரகத்தில் திரு கஷோகி கொல்லப்பட்டார். அவரைப் பிடிக்கவோ கொல்லவோ எடுக்கப்படும் முயற்சிக்குப் பட்டத்து இளவரசர் அனுமதி வழங்கியதாகப் புலனாய்வுத் துறை அறிக்கை ஒன்று கூறியது.
பட்டத்து இளவரசரின் ஒப்புதலின்றி இந்தக் கொலை நடந்து இருப்பதற்கான சாத்தியம் குறைவு என்றது அந்த அறிக்கை.
இதற்கு சவூதி அரேபியா மறுப்பு தெரிவித்துள்ளது. அந்த அறிக்கை போலியானது என்றும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சவூதி அரேபியா கூறியது.
அமெரிக்காவின் நட்பு நாடாக உள்ளது சவூதி அரேபியா. அமெரிக்க புலனாய்வுத் துறை வெளியிட்டுள்ள இந்த அறிக்கை, அமெரிக்க-சவூதி உறவில் விரிசலை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.