ஹாங்காங்கைச் சேர்ந்த 47 ஜனநாயகவாதிகள், ஆர்வலர்கள் மீது கீழறுப்புக் குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.
சீனா நடைமுறைப்படுத்தியுள்ள தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்துக்கு எதிராக செயல்பட்டதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
“ஹாங்காங் மக்களுக்கு இது சவால்மிக்க காலகட்டம். போராட்டத்தைக் கைவிடக்கூடாது என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்,” என்று இளம் ஆர்வலரான சேம் சியூங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
போலிஸ் நிலையத்தில் கையெழுத்திட சென்றபோது அவர் மீது கீழறுப்பு குற்றச்சாட்டு பதிவானது. திரு சியூங்குடன் அவரது மனைவியும் போலிஸ் நிலையத்திற்குச் சென்றிருந்தார்.
கடந்த ஜனவரி மாதம் 6ஆம் தேதியன்று அதிகாலை நேரத்தில் போலிசாரால் நடத்தப்பட்ட அதிரடி நடவடிக்கையில் 50க்கும் மேற்பட்ட ஜனநாயக ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் திரு சியூங்கும் ஒருவர்.
அதிகாரபூர்வமற்ற தேர்தலுக்கு ஏற்பாடு செய்து அதை நடத்தியதாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்தத் தேர்தலில் போட்டியிட்டவர்களில் திரு சியூங்கும் அடங்குவார்.
குற்றச்சாட்டை எதிர்நோக்கும் 47 பேரும் நாளை காலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவர் என்று ஹாங்காங் போலிசார் தெரிவித்துள்ளனர்.
ஜனநாயகவாதிகள் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டபோது அவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களிடமிருந்து கைபேசிகளும் கணினிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. பிறகு விசாரணை தொடரும் என்று கூறி விடுவிக்கப்பட்டனர்.
“பிணை கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம் இல்லை,” என்று ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதற்கு முக்கிய காரணமானவர் என்று சீன அதிகாரிகளால் குற்றம் சுமத்தப்படும் திரு பென்னி டாய் தமது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டார்.
பாதுகாப்புச் சட்டங்களை மீறியதாக சந்தேகிக்கப்படும் ஏறத்தாழ 99 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹாங்காங் போலிசார் தெரிவித்தனர்.