மியன்மாரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து போராட்டம் வலுத்து வரும் நிலையில் அதை ஒடுக்குவதில் ஈடுபட்டு இருக்கும் போலிசின் இரும்புக்கரமும் இறுகுகிறது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இன்று போலிஸ்காரர்கள் சுட்டதில் குறைந்தபட்சம் ஒன்பது பேர் கொல்லப்பட்டுவிட்டதாகவும் ஏராளமானோர் காயமடைந்ததாகவும் ஒரு மருத்துவரும் அரசியல்வாதி ஒருவரும் ஊடகமும் தெரிவித்தன.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இன்று இரண்டாவது நாளாக போலிசார் படை பலத்தைப் பயன்படுத்தினர். யங்கூன் நகரில் ஆசிரியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை போலிசார் கலைத்தபோது மாது ஒருவர் மரணமடைந்துவிட்டார். ஆனாலும் அவர் இறந்ததற்கான காரணம் சரியாகத் தெரியவில்லை என அவரின் புதல்வி கூறினார்.
மியன்மாரில் நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சி அம்மையார் பெரும் வெற்றி பெற்றார். ஆனால் அந்தத் தேர்தலில் தில்லுமுல்லு நடந்துவிட்டதாகக் கூறி அவரையும் அவருடைய கட்சியின் முக்கிய தலைவர்களையும் தடுத்துவைத்துவிட்டு ஆட்சியை ராணுவம் கைப்பற்றிக்கொண்டது.
மியன்மார் ஏறக்குறைய 50 ஆண்டு காலம் ராணுவ ஆட்சியின்கீழ் இருந்து வந்துள்ளது. நவம்பர் தேர்தலை அடுத்து அந்த நாடு ஜனநாயகத்தை நோக்கி திரும்பிவிடும் என்பதற்கான அறிகுறிகள் தெரியவந்தன. ஆனால் அவற்றுக்கு மீண்டும் ஆபத்து வந்துவிட்டது.
மியன்மாரில் நாட்டின் நிர்வாகத்தை ராணுவம் தன்வசம் எடுத்துக்கொண்டதை எதிர்த்து பிப்ரவரி 1 முதல் கலவரங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகின்றன.
அதேவேளையில், ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதற்கு மியன்மார் நிர்வாகம் முழுமூச்சாகக் களத்தில் இறங்கி இருக்கிறது.
ஆட்சியை ராணுவம் பிடுங்கிக்கொண்டதை மேற்கு நாடுகளும் இதர நாடுகளும் கண்டித்து வருகின்றன.
யங்கூன், டாவெய், மாண்டலே நகர்களில் இன்று போலிசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பலர் கொல்லப்பட்டதாக கியாவ் மின் என்ற அரசியல்வாதி தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் கூறியது. யங்கூனில் இன்று போலிஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதை அடுத்து பலரும் காயமடைந்ததால் ஆங்காங்கே ரத்தக் கறை காணப்பட்டதை ஊடகங்களில் பதிவேற்றப்பட்ட படங்கள் காட்டின.
போலிசார் கண்ணீர் புகைக்குண்டு களை வீசியதாகவும் ஆகாயத்தை நோக்கிச் சுட்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அவ்வளவாக படைபலம் பயன்படுத்தப்படுவ தில்லை என்று ராணுவ தலைவர் ஜெனரல் மின் ஆங் லைங் கூறி வருகிறார்.
இருந்தாலும் ஆர்ப்பாட்டங்களில் இதுவரை 12 பேர் கொல்லப்பட்டுவிட்ட தாகத் தெரிவிக்கப்பட்டது. போலிஸ்காரர் ஒருவர் மாண்டதாகவும் கூறப்படுகிறது.