ஆட்சிக்கவிழ்ப்பிற்கு எதிராகப் போராட்டங்கள் தொடரும் நிலையில், போலிசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 38 பேர் மாண்டு போனதால் மியன்மார் மக்களுக்கு மறக்க முடியாத கறுப்பு நாளாகிப் போனது.
இதைத் தொடர்ந்து, மியன்மாரில் ஜனநாயகத்தை மீட்க மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்படி அந்நாட்டிற்கான ஐநா சிறப்புத் தூதர் கிறிஸ்டின் ஸ்ரானர் பர்கனர் உலக நாடுகளை வலியுறுத்தி இருக்கிறார்.
ஆயினும், எத்தகைய தடைகளை விதித்தாலும் மற்ற நாடுகளிடம் இருந்து தனிமைப்படுத்தினாலும் அதை எதிர்கொள்ளத் தயார் என மியன்மார் ராணுவம் தெரிவித்துள்ளதாக திருவாட்டி பர்கனர் கூறினார்.
மியன்மார் ராணுவத்திற்கும் அதன் கூட்டாளிகளுக்கும் நெருக்கடி தரும் விதமாக அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட பல நாடுகள் அந்நாட்டின் மீது தடைகளை விதித்து வருகின்றன அல்லது பரிசீலித்து வருகின்றன.
அங்கு நிலவும் அவசரநிலை குறித்து 15 உறுப்பினர்கள் அடங்கிய ஐநா பாதுகாப்பு மன்றம் கவலை தெரிவித்தபோதும், ரஷ்யா மற்றும் சீனாவின் எதிர்ப்பால் கண்டனம் தெரிவிக்க இயலவில்லை. அது, மியன்மாரின் உள்நாட்டு விவகாரம் என்று ரஷ்யாவும் சீனாவும் கூறி வருகின்றன.