யங்கூன்: மியன்மாரில் நாளுக்கு நாள் போராட்டங்களும் வன்முறையும் அதிகரித்து வரும் நிலையில், அங்குச் செயல்படும் சிங்கப்பூர் நிறுவனங்கள் தங்களது நாட்டைவிட்டு வெளியேறும்படி போராட்டக்காரர்கள் நெருக்குதல் அளிப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த மாதம் 1ஆம் தேதி மியன்மார் ராணுவம், ஜனநாயக அரசைக் கவிழ்த்து, ஆட்சி நிர்வாகத்தைத் தன்வயப்படுத்தியது. அதனை எதிர்த்து ஜனநாயக ஆதரவாளர்கள் அங்கு தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டங்களை ஒடுக்க ராணுவமும் போலிசும் கடுமையாக முயன்று வருகின்றன. போராட்டக்காரர்கள் மீது போலிஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்டோர் மாண்டுபோயினர்.
மியன்மார் தொழில்துறை குறிப்பிடத்தக்க அளவு ராணுவத்தின் வசமிருக்கிறது. 'மியன்மார் இக்கனாமிக் ஹோல்டிங்ஸ் லிமிடெட்', 'மியன்மார் பொருளியல் ஒத்துழைப்பு' எனும் தனது இரு குழுமங்கள் வாயிலாக பல்வேறு துறைகளைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான நிறுவனங்களை ராணுவம் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக 2019 ஐநா அறிக்கை கூறுகிறது.
இந்நிலையில், அண்மைய ஆண்டுகளாக மியன்மாரின் ஆகப் பெரிய வெளிநாட்டு முதலீட்டாளராகச் சிங்கப்பூர் விளங்கி வருகிறது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகால ராணுவ ஆட்சி முடிவிற்கு வந்து, பத்தாண்டுகளுக்குமுன் அங்கு ஜனநாயக ஆட்சி திரும்பியது. அதைத் தொடர்ந்து, அந்நாட்டை மேம்படுத்தும் அனைத்துலக முயற்சிகளில் சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட நிறுவனங்களும் இணைந்தன.
கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் சிங்கப்பூர் 2.5 பில்லியன் வெள்ளியை மியன்மாரில் முதலீடு செய்துள்ளது.
மேலை நாடுகள் பல்வேறு தடைகளை விதித்து, மியன்மார் ராணுவத்திற்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. இந்நிலையில், சிங்கப்பூரைச் சேர்ந்த சில நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களும் ராணுவத்துடன் கொடுக்கல் வாங்கல் வைத்திருப்பதாக ஜனநாயக ஆதரவுப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதையடுத்து, சமூகரீதியிலான அழுத்தத்தையும் புறக்கணிப்பு அச்சுறுத்தலையும் அந்நிறுவனங்கள் எதிர்கொண்டு உள்ளன.
ஆட்சிக்கவிழ்ப்பிற்கு முன்பிருந்தே, மியன்மார் ராணுவத்துடன் தொடர்பு வைத்துள்ள நிறுவனங்களின் பெயர்கள் அடங்கிய 'கறுப்புப் பட்டியலை' சில மனித உரிமை அமைப்புகள் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில், மியன்மாரில் செயல்படும் இருபதிற்கும் மேற்பட்ட சிங்கப்பூர் நிறுவனங்களை 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' தொடர்புகொண்டது. அவற்றில் எட்டு நிறுவனங்கள் பதிலளித்ததாகவும் பெரும்பாலான நிறுவனங்கள் ராணுவத்துடன் தங்களுக்குத் தொடர்பில்லை என மறுத்ததாகவும் கூறப்பட்டது.
இருப்பினும், சில நிறுவனங்கள் தங்களது வர்த்தக நடவடிக்கைகளைக் குறைத்துக்கொண்டுள்ளன. அதேவேளையில், எல்லா நிறுவனங்களும் தங்களது முதலீடுகளை மீட்டுக்கொள்ளவில்லை.
இத்தகைய சூழலில், வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டால் மியன்மார் மக்களே பாதிக்கப்படுவர் என்று மியன்மாருக்கான முன்னாள் ஐநா நிபுணர் கிறிஸ் சிடோட்டி தெரிவித்தார்.

