தங்களுடைய பேரன் ஹேரி, அவரது மனைவி மேகன் மார்க்கல் ஆகியோர் எதிர்கொண்ட சவாலான அனுபவங்கள் குறித்து வருத்தம் அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ள இங்கிலாந்தின் எலிசபெத் அரசியார், அவர்களுடைய மகனுடைய உடல் நிறம் தொடர்பான புகார் சர்ச்சை பற்றித் தனிப்பட்ட முறையில் விசாரிக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நேர்காணல் ஒன்றில், இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்தபோது தாம் எதிர்கொண்ட பிரச்சினைகள் பற்றி ஹேரி - மேகன் தம்பதி பேசியிருந்தனர்.
ஓப்ரா வின்ஃபிரேவுக்கு அளித்த அந்த நேர்காணலில் இளவரசர் ஹேரியும், மேகன் மார்க்கலும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.
தங்களது மகனின் தோல் நிறம் கறுப்பாக இருக்குமோ என்று அரச குடும்பத்தில் விமர்சனம் எழுந்ததாகவும் தமக்கு உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு எண்ணம் தோன்றியபோதும் தமக்கு உதவ யாரும் முன்வரவில்லை எனவும் திருமதி மேகன் மார்க்கல் குறிப்பிட்டிருந்தார்.
“ஹேரிக்கும் மேகனுக்கும் கடந்த சில ஆண்டுகள் எவ்வளவு சவால்மிகுந்தவையாக இருந்தன என்பதை அறிந்து மொத்த குடும்பமும் வருத்தமடைந்துள்ளது,” என்று ராணியாரின் சார்பில் பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“நிற பேதம் உள்ளிட்டவை கடுமையாகக் கருதப்படுகின்றன. அவற்றின் தொடர்பில் குடும்ப அளவில் தனிப்பட்ட முறையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஹேரி, மேகன், ஆர்ச்சி ஆகிய மூவரும் குடும்பத்தால் எப்போதும் மிகவும் நேசிக்கப்படும் உறுப்பினர்கள்,” என்றும் அறிக்கை தெரிவித்தது.
இந்த விவகாரம் தொடர்பில் பதில் அளிப்பதற்கு முன்பு அது கவனமாக ஆராயப்படும் என்றும் கூறப்பட்டது.
தம் தந்தை இளவரசர் சார்லசும் தம்மை வருத்தத்துக்கு உள்ளாக்கியதாகவும் இளவரசர் ஹேரி நேர்காணலின்போது தெரிவித்திருந்தார்.