மியன்மாரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து இன்றும் (மார்ச் 12) அதிகளவில் பேரணிகள் இடம்பெற்று வருகின்றன.
மியன்மார் ராணுவம் நேற்று ஆர்ப்பாட்டக்காரர்கள் 12 பேரைக் கொன்றுவிட்டதாக அங்குள்ள மனித உரிமைக் குழு ஒன்று கூறியது.
இந்நிலையில், ஆங் சான் சூச்சி லஞ்சம் பெற்றதாக ராணுவம் கூறி வருவதில் உண்மை இல்லை என்று அவரின் வழக்கறிஞர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட திருவாட்டி சூச்சியின் அரசாங்கத்தைக் கவிழ்த்து, நிர்வாகத்தை ராணுவம் கைப்பற்றியதை அடுத்து, அதனை எதிர்த்து மியன்மாரில் தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. திருவாட்டி சூச்சியும் அவரது ஜனநாயக தேசிய லீக் கட்சியின் தலைவர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
திருவாட்டி சூச்சி 600,000 அமெரிக்க டாலர் பணத்தையும் தங்கத்தையும் லஞ்சமாகப் பெற்றதை ஒப்புக்கொண்டதாக ராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெனரல் ஸா மின் துன் நேற்று தெரிவித்திருந்தார்.
திருவாட்டி சூச்சி மீது ஊழல் குற்றச்சாட்டையும் சேர்க்கும் பட்சத்தில் அவருக்குக் கடும் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஏற்கெனவே அவர் மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.