மியன்மார் போலிஸ் அதிகாரிகள், தீயணைப்பாளர்கள் உட்பட 400க்கும் அதிகமானோர் அடைக்கலம் நாடி அண்டை நாடான இந்தியாவுக்குள் புகுந்துள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களைச் சுட்டுக்கொல்லும் ராணுவ ஆட்சியின் உத்தரவை நிறைவேற்ற போலிஸ் அதிகாரிகள் மறுத்துவிட்டதால் தண்டனைக்கு அஞ்சி அவர்கள் இந்தியாவுக்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் அவர்களில் 116 பேர் மியன்மாரின் எல்லையைத் தாண்டி இந்தியாவின் மிஸோரம் மாநிலத்திற்குச் சென்றதாக பெயர் குறிப்பிட விரும்பாத இந்திய போலிஸ் அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
எல்லை தாண்டி வருபவர்களை நிறுத்த இந்திய அரசாங்கம் உத்தரவிட்டாலும் மலைப்பகுதியான எல்லையைக் கண்காணிப்பது சிரமம்.
மியன்மாரில் கடந்த மாதம் 1ஆம் தேதி ராணுவத்தின் ஆட்சிக்கவிழ்ப்பைத் தொடர்ந்து அங்கு ஏறக்குறைய 140 பேர் உயிரிழந்துவிட்டனர். ஆயிரக்கணக்கானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ரப்பர் தோட்டாக்கள், கண்ணீர்ப் புகை, துப்பாக்கிச்சூடு போன்றவற்றின் மூலம் ராணுவம் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த முற்பட்டு வருகிறது.
ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் நேற்று கலந்துகொண்டவர்களில் ஆறு பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

