இந்தியாவில் தொடர்ந்து ஆறாவது நாளாக 20,000க்கும் மேற்பட்டோருக்குத் தொற்று

இந்தியாவில் தொடர்ந்து ஆறாவது நாளாக 20,000க்கும் மேற்பட்டோருக்குத் தொற்று

1 mins read
5a19ca60-d980-4680-b362-5ea71502d844
அதிக பாதிப்புக்குள்ளான மகாராஷ்டிராவின் சில மாவட்டங்களில் பொது முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. படம்: இபிஏ -

இந்தியாவில் தொடர்ந்து ஆறாவது நாளாக 20,000க்கும் மேற்பட்டோர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து, சில மாநிலங்கள் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தியுள்ளன.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,292 பேரை கொரோனா தொற்றிவிட்டதாகவும் அதனால் மேலும் 131 பேர் இறந்துவிட்டதாகவும் மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதையடுத்து, மொத்த பாதிப்பு 11.41 மில்லியனாகவும் மரண எண்ணிக்கை 158,856ஆகவும் அதிகரித்தது.

கூட்டம் கூடுவதும் முகக்கவசம் அணியத் தயங்குவதுமே கிருமித் தொற்று மீண்டும் உயரக் காரணம் என்று அரசாங்கம் கூறுகிறது.

அதிக பாதிப்புக்குள்ளான மகாராஷ்டிராவில் இம்மாத இறுதி வரை திரையரங்குகள், ஹோட்டல்கள், உணவகங்களின் கொள்ளளவில் பாதிப் பேருக்கு மேல் அனுமதிக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. அங்கு சில மாவட்டங்களில் பொது முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தின் அகமதாபாத், சூரத், வதோதரா, ராஜ்கோட் ஆகிய நகரங்களில் நாளை முதல் 31ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத் விளையாட்டரங்கில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி மூன்று போட்டிகளின்போது பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று குஜராத் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா நிலவரம் குறித்தும் தடுப்பூசி நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடி நாளை நண்பகலில் காணொளி வழியாக எல்லா மாநில முதல்வர்களுடனும் ஆலோசனை நடத்த இருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்
இந்தியாகொரோனாகிருமித்தொற்று