ஈப்போ: மலேசியா, இந்தியாவிடமிருந்து தடுப்பூசிகளை வாங்க திட்டமிட்டுள்ளது.
இதற்காக இந்திய அரசாங்கத்திடம் பேச்சு நடத்தி வருவதாக மலேசிய அமைச்சர் கைரி ஜமாலுடீன் நேற்று தெரிவித்தார்.
"தடுப்பூசிகளை தருவிப்பது குறித்து இந்திய தூதரகத்திடம் பேசி வருகிறோம். இந்திய அரசாங்கத்திடம் மட்டுமல்லாமல் தடுப்பூசிகளைத் தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா போன்ற நிறுவனங்களுடன் பேசி வருகிறோம்," என்று தேசிய தடுப்பூசி இயக்கத்தை ஒருங்கிணைக்கும் அமைச்சருமான திரு கைரி குறிப்பிட்டார்.
"நோவாவாக்ஸ் தடுப்பூசிகளை விற்பனை செய்வதில் இந்தியா விதித்துள்ள நிபந்தனைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது," என்றார் அவர். உள்ளூர் நிறுவனமான பாரத் பயோடெக் தயாரித்துள்ள தடுப்பூசிகளை வழங்க இந்தியா முன்வந்துள்ளது. ஆனால் இன்னமும் 3வது கட்ட சோதனையை பாரத் பயோடெக் தடுப்பூசிகள் தாண்டவில்லை," என்று அவர் கூறினார்.
பேராக்கில் உள்ள தடுப்பூசி நிலையத்தைச் சுற்றிப் பார்த்த பிறகு அமைச்சர் கைரி செய்தியாளர்களிடம் பேசினார்.
மலேசியாவுக்கும் இந்தியா இலவசமாக தடுப்பூசிகளை வழங்குகிறதா என்று கெஅடிலான் கட்சித் தலைவரான அன்வார் இப்ராஹிம் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் கைரி, வருமானம் குறைந்த நாடாக இல்லாததால் இந்தியாவின் இலவசத் தடுப்பூசித் திட்டத்துக்கு மலேசியா தகுதி பெறவில்லை என்றார்.
வருமானம் குறைந்த நாடு களுக்கு இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் இலவசமாக கொவிட்-19 தடுப்பூசிகளை வழங்கி வருகின்றன.
"மேல்மட்ட நடுத்தர வருமானம் கொண்ட நாடாக நாம் வகைப் படுத்தப்பட்டுள்ளோம். இதனால் கழிவு விலையிலோ அல்லது இலவசமாகவோ தடுப்பூசி கிடைக்க வாய்ப்பில்லை," என்று அமைச்சர் விளக்கினார்.
மலேசியாவில் 3வது கட்ட தடுப்பூசி திட்டம் தொடங்கும்போது பெரிய அளவில் தடுப்பூசி நிலையங்கள் அமைக்கப்படும் என்றார்.
இவ்வாண்டு இறுதிக்குள் தடுப்பூசி திட்டம் நிறைவுபெறும் என்றும் அமைச்சர் கைரி நம்பிக்கை தெரிவித்தார்.

