வாஷிங்டன்: அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் நடைபெற்ற முதல் சந்திப்பு முடிவுபெற்றுள்ளது. இருதரப்பிலும் கருத்து வேறுபாடுகள் எழுந்ததை அவ்விரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
இருப்பினும், பொதுநல விவகாரங்களில் ஒத்துழைப்பு ஏற்படும் என்று அவை நம்பிக்கை தெரிவித்துள்ளன.
பலதரப்பட்ட விவகாரங்களை நேரடியாக அமர்ந்து விவாதிப்பது கடினமாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்ததைப் போலவே நிலைமை அமைந்துவிட்டது என்று அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்தார்.
சீனா தரப்பில் பேச்சுவார்த்தையில் பங்கேற்க வந்த பேராளர்கள் ஹோட்டலின் கூட்ட அரங்கைவிட்டு வெளியேறிய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் விவரங்களை விளக் கினார்.
அப்போது அவருடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிலிங்கனும் இருந்தார்.
ஹாங்காங், மேற்கு சீனாவின் ஸின்ஜியாங் வட்டாரம், திபெத்தின் மனித உரிமை விவகாரம், தைவான் ஆகியவை மீதான சீனாவின் செயல்பாடுகள், இணையத் தாக்குதல்கள் போன்றவை தொடர்பில் விவாதித்தபோது இருதரப்பிலும் கருத்து வேற்றுமை எழுந்ததாக திரு சல்லிவன் கூறினார்.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் முதன்முறையாக இரு நாடுகளின் பிரதிநிதிகளும் நேருக்கு நேர் பங்கேற்கும் இருநாள் சந்திப்பு அலாஸ்காவின் ஆங்கரேஜ் நகரில் வெள்ளிக்கிழமை பிற்பகல் முடிவுற்றது. இறுதியில் நடைபெற்ற பொதுச் சந்திப்பின்போது இரு
தரப்பிலும் காரசார விவாதங்களும் முரண்பாடுகளும் எழுந்தன. இது வழக்கத்திற்கு மாறான நிகழ்வாகக் கருதப்பட்டது.
சீன தரப்பினர் தங்களை பெரிய ஆளாகக் காட்டிக்கொள்கிறார்கள் என அமெரிக்கத் தரப்பில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கு சீனா கடுமையாகப் பதிலளித்தது.
ஒட்டுமொத்த அமெரிக்கர்களும் செய்த தவற்றால் வெடிமருந்தின் வாசனையும் வெற்று நாடகமுமே மிஞ்சி இருப்பதாக சீனத் தரப்பினர் அமெரிக்கா மீது அனல் வார்த்தைகளை வீசினர்.
இருதரப்பும் விட்டுக்கொடுக்காத நிலையில் அமெரிக்க-சீன சந்திப்பு முடிவுற்றது

