கிழக்கு ஆஸ்திரேலியாவில் 50 ஆண்டு காணா வெள்ளம்

கிழக்கு ஆஸ்திரேலியாவில் 50 ஆண்டு காணா வெள்ளம்

2 mins read
1b458ce9-27b7-4135-bb13-1a8086eb7d1e
-

சிட்னி: ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடலோர மாவட்டத்தில் 50 ஆண்டுகள் இல்லாத அளவுக்குப் பேய்மழை பெய்வதால் பெரும் வெள்ளம் ஏற்பட்டுவிட்டதாக இன்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துவிட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் முழுவதுமே தொடர்மழை பெய்து வருவதாக அந்த மாநில முதல்வர் லாடிஸ் கூறினார். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் தான் ஆக அதிக மக்கள் வசிக்கிறார்கள். சிட்னி நகரின் வடமேற்குத் தாழ்வுப் பகுதிகளில் எதிர்பார்க்கப்பட்டதைவிட மோசமான வெள்ளம் ஏற்பட்டுவிட்டது. அது 50 ஆண்டு காலத்தில் இல்லாத அளவுக்கு இருக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.

சிட்னி நகரின் சில பகுதிகளைப் பார்க்கையில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குகூட நிலவரம் மோசமாக இருக்கிறது என்றும் முதல்வர் லாடிஸ் தெரிவித்தார். பல்வேறு முக்கிய சாலைகளும் மூடப்பட்டுவிட்டன. அந்த மாநிலத்தில் பல பள்ளிக்கூடங்களும் நேற்று வகுப்புகளை நிறுத்தின.

இதனிடையே, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிதி உதவி வழங்கப்படும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்கூட் மோரிசன் ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவித்தார். அந்த மாநிலத்தின் 13 பகுதிகளில் வெள்ள ஆபத்து குறித்தும் மக்கள் வெளியேறிவிட வேண்டிய அவசியம் குறித்தும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. பல அணைக்கட்டுகளும் நிரம்பி வழிகின்றன.

இந்நிலையில், மழை இன்னும் பல நாட்களுக்குத் தொடரும் என்று வானிலை ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது. வியாழக்கிழமை மழை தொடங்கியது முதல் ஏறத்தாழ 6,000 அவசர அழைப்புகளின் பேரில் செயல்பட்டு அவசரகால ஊழியர்கள் மக்களுக்கு உதவி இருக்கிறார்கள்.

மீட்பு நிலையங்களில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் குழுமி இருக்கிறார்கள். சிலர் அனைத்தையும் இழந்துவிட்டதாக கிளப் டாரி என்ற நகரின் தலைமை நிர்வாகி பால் ஆலன் தொலைக்காட்சியில் தெரிவித்தார்.

இவ்வேளையில், பேய்மழை காரணமாக நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் முழுவதுமே கொவிட்-19 தடுப்பூசி திட்டம் பாதிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் கூறினர். அந்த மாநிலம் முழுவதும் சரக்கு போக்குவரத்தும் பாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக வேறு பாதுகாப்பான இடத்துக்குச் சென்றுவிடும்படி சிட்னி நகரின் பல பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது. சிட்னியில் 12 மணி நேரத்தில் 100 மி.மீ. மழை பெய்யும் என்று முன்னுரைக்கப்பட்டு இருக்கிறது. புளு மவுண்டென்ஸ் பகுதியில் 300 மி.மீ. வரை மழை பெய்யக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.

மழையும் கடுமையான காற்றும் அடுத்த வாரம் பிற்பகுதி வரை நீடிக்கும் என்றும் வியாழக்கிழமை வரை வெள்ளம் வடிவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் முன்னுரைக்கப்பட்டு உள்ளது.